அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு கள்ளழகரின் குதிரை, கருடன் மற்றும் சேஷ வாகனங்கள் புறப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சியில் அழகருக்காக பயன்படுத்தப்படும் தங்க குதிரை வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் கோவிலில் இருந்து இன்று புறப்பாடு ஆகி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான உலகப் புகழ் பெற்ற அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் சித்திரை திருவிழா இன்று மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி உடன் தொடங்கி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி 01-ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காகவும் அதனை தொடர்ந்து வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனம் அதனைத் தொடர்ந்து 02ஆம் தேதி தேனூர் மண்டபடியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வின்போது பயன்படுத்தக்கூடிய கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அழகர் கோவிலில் இருந்து இன்று மதுரைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: களைகட்டிய சித்திரை திருவிழா..! குலுங்கும் மதுரை... அழகர் உடை தயாரிக்கும் பணி தீவிரம்..!
இதில் தங்கக் குதிரை வாகனம் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலிலும் கருடன் மற்றும் சேஷ வாகனங்கள் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலிலும் பாதுகாப்பாக வைக்கப்படும். அழகரின் வாகனங்கள் புறப்படும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் மேற்கொண்டனர். இன்று மாலை கள்ளழகர் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியோடு துவங்கி சித்திரை திருவிழாவானது நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: வாக்களிக்க சென்ற பெண்ணுக்கு கத்திக்குத்து..! மதுரையில் பரபரப்பு..!!