மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்க மக்கள் மீன் கூட சாப்பிட முடியாது” என்று அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மேற்கு வங்காளத்தில் 294 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் (டி.எம்.சி.) மற்றும் பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், ஆட்சியைத் தக்கவைக்க மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
புருலியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “பா.ஜ.க.வுக்கு எந்த மதத்தின் மீதும் உண்மையான நம்பிக்கை இல்லை. கலவரத்தை தூண்டி அதன் மூலம் அரசியல் லாபம் தேடுவதுதான் அவர்களின் வேலை” என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: வெளியே தலைகாட்டி 2 வருசமாச்சு!! தெலுங்கானா மாஜி முதல்வர் சந்திரசேகர ராவுக்கு என்னாச்சு?
மேலும் அவர், “மீன் சாப்பிடுவது மேற்கு வங்க மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. இங்கு பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் மீன் சாப்பிடுவதை தடுத்து நிறுத்துவார்கள். இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மக்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை இவர்கள் யார் தீர்மானிப்பது?” என்று கேள்வி எழுப்பினார்.

“பா.ஜ.க.வின் பிரித்தாளும் அரசியலுக்கு மக்கள் இரையாகிவிடக் கூடாது” என்று எச்சரித்த மம்தா, தன் கட்சியின் ஆட்சியைத் தொடர வாக்காளர்களை வலியுறுத்தினார். மேற்கு வங்க மக்களின் உணவுப் பழக்கத்தை அரசியலாக்கி, அதன் மூலம் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் மம்தாவின் இந்தப் பேச்சு மாநில அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வினர் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மம்தா உணவு அரசியலை புகுத்தி மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.
மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் இரு கட்சிகளுக்கும் இடையேயான கடுமையான போட்டியாக உருவெடுத்துள்ளது. மம்தா பானர்ஜியின் இந்தப் பேச்சு, தேர்தல் பிரசாரத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணுக்கு வேட்டு வைத்த நபர்!! கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி! டெல்லியில் அரங்கேறிய சம்பவம்!