தமிழக அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ம.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ம.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதிருப்தியில் உள்ள மூத்த நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, ம.தி.மு.க. முதன்மை செயலர் துரை வைகோவின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள் சிலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக முன்னாள் மாநில நிர்வாகி பொடா அழகுசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலர்கள் சண்முகசுந்தரம், புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், முன்னாள் அவைத்தலைவர் எஸ். துரைசாமி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர். மேலும், முன்னாள் துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யாவும் ம.தி.மு.க.வை விட்டு விலகி தனியாக திராவிட வெற்றிக்கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமா? நிர்பந்தமா? வைகோ, துரை வைகோ பேச்சால் திமுக அப்செட்!

சட்டசபை தேர்தலுக்கு முன்பே இந்த அதிருப்தியாளர்கள் தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை உடனடியாக சேர்த்தால் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு வருத்தம் ஏற்படும் என்ற காரணத்தால், தி.மு.க. தலைமையகம் அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் இனி கட்சி தனிச்சின்னத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என துரை வைகோ ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறும் வாய்ப்பு குறித்த பேச்சுகளும் அதிகரித்துள்ளன.
அப்படிப்பட்ட சூழல் உருவானால், தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள அதிருப்தியாளர்களை தி.மு.க.வில் இணைக்க கட்சித் தலைமையிடம் இருந்து சாதகமான சிக்னல் கிடைத்துள்ளதாக சில தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தின் முடிவுகள் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: உயிரைக் கொடுத்து பிரச்சாரம் செய்தேன்..! ஆனால்... வைகோ பரபரப்பு பேட்டி..!!