இன்றே தேர்தல் வந்திடாதா என்று மக்கள் ஏங்குமாறு சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் பாதுகாப்பை பறிக்கும் திமுக அரசின் முடிவு காலம் வெகு தொலைவில் இல்லை என கூறியுள்ளார்.
சென்னையில் அடையாறு அருகே சாக்கு மூட்டையில் வெட்டுக் காயங்களுடன் இரத்தம் வழிய வடமாநில இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவத்தை நயினார் சுட்டிக்காட்டினார். வடமாநில இளைஞர் சடலம் மீட்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சி அளிப்பதாகவும் மாநிலத் தலைநகரிலேயே சிறிதும் பயமின்றி கொன்றுவிட்டு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், பட்டப்பகலில் சாக்கு மூட்டையில் சடலத்தை வீசிச் செல்லும் அளவிற்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது என்றும் தெரிவித்தார்.

கொடூரக் குற்றங்களை என்றோ ஒருநாள் கேள்விப்படும் காலம் மலையேறி, எங்கு காணினும் கொலை, கற்பழிப்பு, கொள்ளை, கஞ்சா போதைத் தாக்குதல் என நொடிக்கு ஒரு வன்முறை செய்தி செவிகளில் எட்டிக் கொண்டே இருப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். இதே ரீதியில் சென்றால், தமிழகத்தில் வாழ்வதே நரகமாகிவிடும் போல என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜயை மிரட்டும் அவசியம் பாஜகவுக்கு இல்லை..! திமுகவுக்கு பயம்..! நயினார் நாகேந்திரன் விளாசல்..!
காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி, திக்கெட்டும் கஞ்சா போதைமயமாக்கி, குற்றவாளிகளைப் பெருக்கெடுக்கச் செய்து தங்கள் உயிரோடு விளையாடும் அலட்சிய திமுக அரசை ஒழித்துக் கட்டினால் மட்டும் தான் நிம்மதி எனத் தமிழக மக்கள் அனைவரும் தேர்தலை எதிர்நோக்கிக் காத்து வருகின்றனர் என்று கூறினார். எனவே, மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அவ்வளவு என்ன மெத்தனம்? காலி பணியிடங்களை குறிப்பிட கூட நேரமில்லையா? நயினார் சரமாரி கேள்வி..!