பாமகவின் மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் தற்போதைய தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையேயான உள்கட்சி மோதலால் உருவான சர்ச்சையாகும்.பாமக கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமான மாம்பழம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த குழப்பம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கீடு செய்து, அதற்கான கடிதத்தை அவரது முகவரிக்கு அனுப்பியிருந்தது.
இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்யவும், சின்னத்தை தனது முகவரிக்கு ஒதுக்க உத்தரவிடவும் கோரப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் ராமதாஸ் தரப்பின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனால், கட்சியின் உள் பிரச்சினையை சிவில் நீதிமன்றத்தில் தீர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், சில கட்டங்களில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டதும், சின்னத்தை முடக்கக்கோரிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டதும் நிகழ்ந்தன.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், மாம்பழ சின்னத்தை தற்காலிகமாக முடக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது என்றும் வாதிடப்பட்டது. பாமக சின்னம் தொடர்பான வழக்கில் சிவில் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவில் நீதிமன்றம் அடுத்த மூன்று நாட்களுக்குள் வழக்கை விசாரிக்க முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: விடிந்ததுமே ஷாக்... தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புதிய விண்ணப்பம்... அன்புமணி தலையில் இறங்கியது இடி...!
மாம்பழ சின்னம் அன்புமணி தரப்புக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு முறையிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் தரப்பு நாடிய நிலையில் மனுத் தாக்கல் செய்தது. ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் நாளை அன்புமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தர்ம பிரபு உத்தரவிட்டார். நாளை இருதரப்பு வாதங்களும் கேட்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீளும் மாம்பழ சின்னம் பிரச்சனை...! சென்னை உரிமையியல் நீதிமன்றத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..!!