இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது 2026-ஆம் ஆண்டின் முதல் ஏவுதலை ஜனவரி 12-ஆம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மேற்கொண்டது. PSLV-C62 ராக்கெட் மூலம் 16 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் (PS3) ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் திட்டமிட்ட பாதையில் செல்ல முடியாமல் தோல்வியடைந்தது. இதனால் அனைத்து 16 செயற்கைக்கோள்களும் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது. இது இஸ்ரோவின் மிகவும் நம்பகமான PSLV ராக்கெட்டுக்கு கடந்த 2025 மே மாதத்திற்கு பிறகு இரண்டாவது தொடர் தோல்வியாகும்.
முதன்மை செயற்கைக்கோளான DRDO-வின் EOS-N1 (Anvesha) உட்பட பல இந்திய தனியார் நிறுவனங்கள், பிரேசில், நேபாளம், ஸ்பெயின், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் செயற்கைக்கோள்கள் இழக்கப்பட்டுள்ளன. இது இஸ்ரோவின் வணிக ஏவுதல் திட்டங்களுக்கும், தனியார் விண்வெளி துறைக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஜப்பானே அசந்து போச்சு!! இந்தியா செய்த அசத்தல் சாதனை!! இஸ்ரோ தலைவர் ருசிகர தகவல்!!
இருப்பினும், தோல்விக்கு மத்தியில் ஒரு நம்பிக்கை தரும் செய்தி உள்ளது. பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனமான பிக்சல் (Pixxel) அனுப்பிய Firefly என்ற ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் ராக்கெட் தோல்வியடைந்த போதிலும் விண்வெளியில் இருந்து சிக்னல்களை அனுப்பி வருகிறது.

இது பூமியின் வளங்களை மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது. பிக்சல் நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Kestrel Initial Demonstrator (KID) என்ற சிறிய காப்ஸ்யூல் ராக்கெட்டில் அனுப்பப்பட்டது. இது வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது ஏற்படும் வெப்பம், அழுத்தம் குறித்த தரவுகளை சேகரிக்க வடிவமைக்கப்பட்டது.
ராக்கெட் தோல்வியடைந்தாலும் இந்த காப்ஸ்யூல் கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதில் உள்ள தரவுகளை மீட்டெடுத்தால் ராக்கெட் எங்கு தவறியது என்பதை அறிய முடியும். இது எதிர்கால விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் திட்டங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இஸ்ரோ தற்போது இந்த தோல்வியின் காரணத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. PSLV ராக்கெட் தொடர்ந்து நம்பகமானதாக இருந்து வந்தாலும், இந்த இரண்டு தோல்விகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உணர்வே போற்றி... பொங்கல் விழாவில் பாடி அசத்திய G.V..! கலை நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டு ரசித்த பிரதமர் மோடி..!