தமிழக அரசியல் களத்தில் மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக உள்ள நிலையில், தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி (NTK) தனது முழு வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிட உள்ளது. திருச்சியில் பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்யவுள்ளார். மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்ற பெயரில் திருச்சியில் நடைபெறும் இந்த நிகழ்வில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். ஏற்கனவே கடந்த சில மாதங்களாகப் பகுதி வாரியாக வேட்பாளர்களை அறிவித்து வந்த சீமான், நாளை முழுப் பட்டியலையும் இறுதி செய்ய உள்ளார்.

இந்தத் தேர்தலில் சீமான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவர் தனது சொந்த மாவட்டமான சிவகங்கை அல்லது கடந்த முறை போட்டியிட்ட திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மாநாட்டிலேயே அவர் தனது தொகுதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். தனது வழக்கமான பாணியில் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்களுக்குச் சரிசமமாக வாய்ப்பு வழங்கி, சமூக நீதி மற்றும் பாலினச் சமத்துவத்தை முன்னிறுத்தி வேட்பாளர்களை அவர் களமிறக்குகிறார். மற்ற கட்சிகளைப் போலத் தேர்தல் அறிக்கை (Manifesto) வெளியிடப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாகத் தமிழகத்தின் வளர்ச்சி குறித்த செயல் திட்ட வரைவை அச்சு மற்றும் வீடியோ வடிவில் மாநாட்டில் வெளியிட உள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் வேறு! நட்பு வேறு! விமர்சனங்களை தாண்டி தலைவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம்!
தமிழகத்தில் திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும் சீமான், இந்த மாநாட்டின் மூலம் தனது பலத்தை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளார். கடன் சுமை இல்லாத தமிழகம், கல்வி மற்றும் சுகாதாரத்தில் புரட்சி ஆகியவற்றை மையமாக வைத்து வேட்பாளர்கள் பரப்புரையைத் தொடங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்துத் தேர்தல் களத்தில் முதல் ஆளாக நாம் தமிழர் கட்சி தனது பரப்புரையை அதிகாரப்பூர்வமாக நாளை தொடங்குகிறது.
இதையும் படிங்க: கைது செய்யப்பட்ட சீமான்.. பின்னர் விடுவிப்பு..!! வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது என்ன..??