சென்னை: சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினும் கட்டியணைத்து மகிழ்ச்சி பரிமாறிக் கொண்ட காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கம் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சுக்கு அடித்தளம் போடப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் விலகி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளன. தற்போது தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ளன.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியுடன் தி.மு.க. திடீர் நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த திருமண விழாவில் மு.க. ஸ்டாலினும் சீமானும் ஒன்றாகப் பங்கேற்று உற்சாகமாகப் பேசினர். அதைத் தொடர்ந்து நேற்று திருவேற்காட்டில் நடைபெற்ற தி.மு.க. தலைமை நிலைய செயலர் துறைமுகம் காஜா மகள் திருமண விழாவில் உதயநிதி வருகை தந்த சில நிமிடங்களில் சீமானும் வந்தார்.
இதையும் படிங்க: தவெக தாவிய அதிமுக மாஜிக்களுக்கு ஆப்பு வைக்க இபிஎஸ் திட்டம்! டெல்லிக்கு கைமாறும் ஊழல் ஆவணங்கள்!

உதயநிதியைப் பார்த்ததும் சீமான் சிரித்தபடி அருகில் சென்றார். உடனே எழுந்த உதயநிதி சீமானை கட்டியணைத்து வரவேற்றார். “அப்பா நல்லா இருக்காரா தம்பி? உடம்பைப் பார்த்துக்க சொல்லுங்க. வெளிநாடு பயணம் வெற்றிகரமாக இருக்கட்டும்” என சீமான் கேட்டதற்கு உதயநிதி பதிலளித்தார். இன்பநிதிக்கு பட்டம் பெற வாழ்த்து தெரிவித்த சீமானுக்கு உதயநிதியும் நன்றி தெரிவித்தார். இருவரும் சிரித்துப் பேசிய காட்சி இரு கட்சியினரையும் உற்சாகப்படுத்தியது.
இதனிடையே, தி.மு.க. தலைமை சில வியூக நிறுவனங்கள் மூலம் ரகசிய சர்வே நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து தவெகவுக்கு பலர் இணைவதால் வரும் இடைத்தேர்தல்களில் தி.மு.க.க்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை அறியும் வகையில் இந்த சர்வே நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. லண்டனில் இருந்து திரும்பும் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அடுத்தகட்ட திட்டங்கள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அனிதா ராதாகிருஷ்ணன் கைதில் சொதப்பிய போலீஸ்?! மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளை தூக்கியடிக்க முடிவு?!