திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வந்தது. நேற்று அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டனர். இறால் பதப்படுத்தும் தொழில் என்பதால் அங்கு எப்போதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சூழல் நிலவுகிறது. அந்த அமைப்பில் பயன்படுத்தப்பட்ட அமோனியா வாயு கசிந்ததால், அங்கு பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
இதன் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. சிலருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டதால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலும், சிகிச்சை பலனின்றியும் இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் தேவையான வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் அனைவருக்கும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுடன், அவர்களின் உடல்நிலையும் மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவினர் தவெகவில் இணைவது ஏன்?... அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் புதுவித விளக்கம்...!
இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் 10 பேருக்கும் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களும் தீவிரமான உடல்நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பலரும் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதால், அவர்களில் சிலர் விரைவாக குணமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தற்போதைய நிலவரப்படி, அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறைவான பாதிப்புக்குள்ளான சில தொழிலாளர்கள் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த சிலருக்கும் மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதால், அவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அமோனியா, உடலுக்குள் சென்றபோது அமோனியம் ஹைட்ராக்சைடாக மாறி கடுமையான காரத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் மூச்சுக்குழாய், தொண்டை மற்றும் நுரையீரலின் மேற்பரப்புகளில் கடுமையான ரசாயன காயங்கள் ஏற்படுகின்றன. மேலும் காற்றுப்பாதைகள் வீங்கி அடைபடுவதுடன், நுரையீரலின் அடிப்பகுதியில் உள்ள செல்களும் கடுமையாக சேதமடைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏற்கனவே இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண், ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒரு பெண் என ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவமனைகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமான சூழ்நிலை என்ன, தனியார் நிறுவனத்தில் என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொத்தத்தில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 10 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: யார் இந்த "குடிகார குள்ளநரி"..?? அதிமுக அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!!