தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள், கட்சியின் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறித் தனது கடும் அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வரும் வேளையில், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலத் தலைமை மீது அவர் அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியுள்ளார்.
தொகுதித் தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எங்களது கருத்தைப் பொறுப்பாளர்கள் ஏற்கவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடந்துள்ளது, என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியை நீடிக்காவிட்டால் அரசு ஊழியர்களின் ஊதியம் பறிபோகும்! நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத சிலர், உண்மையான தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை விற்றுத் தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது, என்று அவர் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். கட்சியின் நலன் முழுமையாகச் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பாளர்களும், மாநிலத் தலைவரும் மட்டுமே கட்சி அல்ல; லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வுகளே கட்சி என்று சுட்டிக்காட்டிய ஜோதிமணி, இதே 'விற்பனை அணுகுமுறை' வேட்பாளர் தேர்விலும் தொடர்ந்தால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு இது குறித்து மேலும் விரிவாகப் பேசப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல்கள் மற்றும் கூட்டணி குறித்த அதிருப்திகள் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், எம்.பி. ஜோதிமணியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், காங்கிரஸ் மேலிடத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி தொகுதி பங்கீடு நிறைவு! காங்கிரஸ் 16, திமுக 12 இடங்களில் போட்டி!