தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சிறு கனிமங்களைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை எதிர்த்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கனரக வாகன உரிமையாளர் பி. லிபின் பொன்னுசாமி லீலா, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 3) நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
ஜூலை 27 அன்று புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரபு சங்கர் பிறப்பித்த உத்தரவின்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்ட சிறு கனிமங்களை மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது.
மாநிலத்திற்குள் கட்டுமானத் தேவையை முன்னுரிமை அளித்துப் பூர்த்தி செய்வதும், சட்டவிரோத சுரங்கம் மற்றும் கடத்தலைத் தடுப்பதும், செயற்கை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, அதிக எடையுள்ள வாகனங்கள் காரணமாக சாலைகள் சேதமடைவதும் விபத்து அபாயமும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!
மனுதாரர் தரப்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள உரிமம் பெற்ற குவாரிகளிலிருந்து செல்லுபடியாகும் போக்குவரத்து அனுமதிச் சீட்டுகளுடன் டெண்டர் முறையில் கனிமங்களை எடுத்துச் செல்வதாகவும், இது முற்றிலும் சட்டப்பூர்வமான வியாபாரம் என்றும் வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிட்டார்.

திடீரென விதிக்கப்பட்ட இந்தத் தடை முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் பிறப்பிக்கப்பட்டதாகவும், இதுபோன்ற தடைகளை உச்சநீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளதாகவும், அடிப்படை உரிமைகள் (குறிப்பாக அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(g) கீழ் தொழில் செய்யும் உரிமை) மீறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. ஏற்கனவே உள்ள வணிக ஒப்பந்தங்கள் பாதிக்கப்பட்டு நிதி நெருக்கடி ஏற்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர், குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டப்பட்டு கனரக வாகனங்களில் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதால் தமிழகத்தில் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்படுவதாகவும், அதைத் தடுக்கவே தற்காலிக தடை விதிக்கப்பட்டதாகவும் வாதிட்டார். முறையான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நீதிபதிகள், மனுதாரர் சட்டவிரோத கடத்தலில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா எனக் கேள்வி எழுப்பினர். கனிமக் கொள்ளையைத் தடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தனர். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு ஒத்திவைத்து, அதற்குள் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்தத் தடையால் தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கனிமங்கள் செல்வது முற்றிலும் நின்றுவிட்டதால், அண்டை மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கேரள முதலமைச்சர் இதுதொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேநேரம், மாநிலத்திற்குள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் சில தரப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!