அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முக்கிய நிர்வாகியும், மாணவியர் அணிச் செயலாளருமான வழக்கறிஞர் பி. ஜீவிதா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நடவடிக்கையை உறுதி செய்துள்ளார்.
அமமுக-வில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் மற்றும் அரசியல் மாற்றங்களின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமமுக தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆனால், அதிமுக-வை ஒருங்கிணைப்பேன் எனக் கூறி வரும் சசிகலாவை, ஜீவிதா நாச்சியார் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். கூட்டணி விவகாரத்தில் சசிகலா - தினகரன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜீவிதா நாச்சியாரின் இந்தச் செயல், கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணானது என்றும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் அவர் நடந்து கொண்டதாகவும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞரான ஜீவிதா நாச்சியார், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர். ஐடி விங் மகளிர் பிரிவு இணைச் செயலாளராகப் பணியாற்றிய அவர், பின்னர் மாணவியர் அணிச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார். திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளராகவும் அவர் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுகவில் இணையவே விருப்பம்..!! டிடிவி நினைத்தால் அது நடக்கும்..!! ஓபிஎஸ் ஓபன் டாக்..!!
சமீபகாலமாக சசிகலாவுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அண்ணா நினைவு நாள் அன்று மெரினாவில் அஞ்சலி செலுத்த வந்த தினகரன், சசிகலா வருவதைக் கண்டதும் அவசர அவசரமாகப் பேட்டியை முடித்துக் கொண்டு கிளம்பியது சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்படும் நிர்வாகிகளைத் தினகரன் நீக்கி வருவது, அதிமுக கூட்டணியில் அவர் தனது பிடியை வலுப்படுத்துவதையேக் காட்டுகிறது.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்தது; இனி இருவரும் இணைந்தே பயணிப்போம்! டிடிவி தினகரன் நெகிழ்ச்சி!