முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் விஜய் கையெழுத்திட்ட 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் குளறுபடிகள் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தவெக-வின் தேர்தல் வாக்குறுதிக்கும், தற்போது வெளியாகியுள்ள அரசாணைக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசின் அறிவிப்பு குறித்து டிடிவி தினகரன் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, தேர்தல் பிரச்சாரத்தின் போதும், தவெக தேர்தல் அறிக்கையிலும் மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றுதான் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பதவியேற்ற பிறகு கையெழுத்திடப்பட்டுள்ள கோப்பில் இரு மாதங்களுக்கு 200 யூனிட் என அறிவிக்கப்பட்டிருப்பது மக்களை ஏமாற்றும் செயல்."
புதிய அரசு தனது முதல் அறிவிப்பிலேயே இத்தகைய முரண்பாடுகளைக் கொண்டிருப்பது அதன் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது. மாதம் 200 யூனிட் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், தற்போதைய அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது" என அவர் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!
முதலமைச்சர் விஜய் இன்று கையெழுத்திட்ட அரசாணையின்படி, இரு மாதங்களுக்கு (Bimonthly) 500 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும். 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால், பழைய 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டமே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 10 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாக முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த இலவச மின்சாரத் திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ₹1,730 கோடி கூடுதல் சுமை ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 யூனிட் வழங்காமல், இரு மாதங்களுக்கு ஒருமுறை என அரசு பின்வாங்குகிறதா என்கிற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பத் தொடங்கியுள்ளன. ஆட்சியின் முதல் நாளிலேயே இலவச மின்சாரத் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள இந்த விவாதம், நாளை சட்டசபை கூடும்போது மிகப்பெரிய விவாதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் பதவியேற்பு விழா! டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி!