உத்தரபிரதேசத்தில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டின் உள்துறை பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை எழுப்பியுள்ளது.
சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்களில் நடைபெறும் சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த கண்காணிப்பின் ஒரு பகுதியாக, பாட்னா மாவட்டம் சித்தபூரைச் சேர்ந்த இர்பான் காலேகான் பதான் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்ற ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், இர்பான் பதானை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரது செல்போன் மற்றும் சமூக வலைதளப் பயன்பாடுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. அதில், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு செயலுக்கும் பதிலடி உறுதி!! எப்போதும் நீதி நிலைநாட்டப்படும்! இந்திய ராணுவம் எச்சரிக்கை!!

மேலும், இந்த திட்டம் தனிப்பட்ட செயல் அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்களை இணைத்துக் கொள்ள முயற்சி செய்ததும், அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க திட்டமிட்டதும், எல்லை தாண்டி ஆயுதங்களைப் பெற முயன்றதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் மும்பை சாகினாகாவைச் சேர்ந்த முர்ஷித் ஜாகித் அக்தர் ஷேக் என்பவருக்கும் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் அவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கைது நடவடிக்கை மூலம் ஒரு பெரிய சதித் திட்டம் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
போலீசார் இந்த வழக்கை மிகுந்த கவனத்துடன் விசாரித்து வருகின்றனர். மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் இதுபோன்ற தொடர்புகள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்பு அமைப்புகள் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: டெல்லிக்கு பாக்., டார்கெட்! குண்டு வீசவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் திட்டம்!! உளவாளிகள் இருவர் கைது!