தமிழக அரசியலில் நீண்ட காலமாக கூட்டணி அரசியலின் முக்கிய முகமாக இருந்து வரும் வைகோ (Vaiko) மீண்டும் அரசியல் கவனத்தின் மையமாக மாறியுள்ளார். சமீப காலமாக விஜய் (Vijay) மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தை வைகோ தொடர்ந்து பாராட்டி வருவது, அடுத்த மக்களவைத் தேர்தலில் மதிமுக – தவெக கூட்டணி உருவாகுமா என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்தாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மதிமுக வட்டாரத்தில் அதிருப்தி அதிகரித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, மதிமுகவுக்கு குறைந்த தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதுடன், தனிச்சின்னத்தில் போட்டியிட முடியாமல் உதயசூரியன் சின்னத்தில் களம் காண வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கட்சிக்குள் “சுய அடையாளம் மங்குகிறது” என்ற மனநிலை உருவானதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த சூழலில்தான் விஜய், வைகோவின் இல்லத்துக்குச் சென்ற சம்பவம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. அப்போது, “வீட்டில் இருந்த பலரும் விஜய்க்கே வாக்களித்தார்கள்” என்று துரை வைகோ சிரித்தபடி கூறிய சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்காததும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.
இதையும் படிங்க: தமிழ் மொழி உரிமைக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு பச்சைத் துரோகம் செய்யாதீர்..!! வைகோ எச்சரிக்கை..!!
அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, வைகோ எப்போதும் நீண்டகால அரசியல் கணக்கோடு முடிவெடுக்கும் தலைவர். இளைஞர்களின் ஆதரவு எந்த பக்கம் நகர்கிறது என்பதை கவனமாக கணக்கிடுபவர் என்றும் கூறப்படுகிறது. தற்போது, தமிழகத்தில் இளைஞர்களின் ஆதரவு வேகமாக விஜய் பக்கம் நகர்கிறது என்ற மதிப்பீடு மதிமுகவுக்குள் வலுப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மகன் துரை வைகோ (Durai Vaiko)-வின் அரசியல் எதிர்காலத்தை வலுப்படுத்தவும், நாடாளுமன்ற அரசியலில் அதிக வாய்ப்புகளைப் பெறவும் புதிய கூட்டணி அவசியம் என்ற கருத்தும் மதிமுக வட்டாரத்தில் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால், திமுக கூட்டணியில் தொடர்வாரா அல்லது தவெகவுடன் புதிய அரசியல் பாதையை தேர்வு செய்வாரா என்ற கேள்வி தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் அரசு திராவிட நிலைப்பாட்டை தொடர வேண்டும்!: தஞ்சையில் வைகோ பேட்டி!