சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க, சட்டப்பேரவை செயலாளர், சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இரு எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புறக்கணிக்கப்படுகிறாரா புதுக்கோட்டை விஜயபாஸ்கர்?... தவெகவில் தலைவிரித்தாடும் பவர் பாலிடிக்ஸ்...!
மேலும், சபாநாயகர் உரிய பரிசீலனை மேற்கொள்ளாமல் அவசரமாக முடிவெடுத்துள்ளதாகவும், எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனத்திற்கும் இயற்கை நீதி கோட்பாடுகளுக்கும் எதிரானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ். தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்கள் தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர், சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஏற்கனவே நான்கு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளுடன், இந்த இரண்டு வழக்குகளும் விசாரிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: "மாப்ள பர்வேஸ்..! அமைச்சரை சொந்தம் கொண்டாடிய C. விஜயபாஸ்கர்...! பொளந்துக்கட்டிய கிருஷ்ணசாமி..!