தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிர்பாராத புயலாக எழுந்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் தொடர் ஆதிக்கத்துக்கு தீர்க்கமான முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தனது முதல் சட்டசபைத் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ள தவெக, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
மொத்தம் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டசபையில் தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. தவெக தற்போது 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது. இந்த நிலையில், கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மேலும், தவெகவின் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் ஒருவர் சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபாநாயகர் வாக்களிக்கத் தகுதியற்றவர் என்பதால், தவெகவின் உண்மையான வலிமை மேலும் குறையும். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 12 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது.
இதையும் படிங்க: #BREAKING: தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து! தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும் என உறுதி!
கூட்டணி கணக்குகள்: திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 6 இடங்களும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் வீதம் 4 இடங்களும், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தை கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 முதல் 2 இடங்கள் வரை கிடைத்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 4 இடங்களையும், பா.ஜ.க. ஒரு இடத்தையும், அம.மு.க. ஒரு இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த சிறிய கட்சிகள் அனைத்தும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தால், 21 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். இதனால் 108 + 21 = 129 என்ற எண்ணிக்கையில் த.வெ.க. தெளிவான பெரும்பான்மையைப் பெற முடியும். என்றாலும், 12 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது என்பதால் பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்னரின் முக்கிய முடிவு: இந்நிலையில், தமிழக கவர்னர் ஆர்.வி. அர்லேகர் நாளை (மே 5) சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வருகை தருகிறார். அவர் தவெக தலைவர் விஜய்யை அழைத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிப்பார் அல்லது ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு கோருவார். 118க்கு மேல் ஆதரவு உறுதியானால் த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்க உரிமை வழங்கப்படும். ஆதரவு கிடைக்காத பட்சத்தில் தி.மு.க.வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
இரு கட்சிகளாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், அடுத்த ஆறு மாதங்களுக்கு கவர்னர் ஆட்சி அமலுக்கு வரும். பின்னர் முழு தொகுதிகளுக்கும் புதிய தேர்தல் நடத்தப்படும். தமிழக அரசியலில் இந்த திருப்பம் பல புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது. த.வெ.க.வின் அடுத்த நகர்வுகள் மற்றும் சிறிய கட்சிகளின் நிலைப்பாடுகள் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளன.
இதையும் படிங்க: #BREAKING: ராசிபுரத்தில் தவெக வெற்றி! அமைச்சர் மதிவேந்தனை வீழ்த்திய தனபால் மகன் லோகேஷ்!