கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி மகள் சங்கீதா வயது 18. இவர் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பார்வதி தனது மகள் சங்கீதாவை மணத்தட்டையைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பார்வதி தனது மகள் சங்கீதாவை திருப்பூரைச் சேர்ந்த நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் சசிகுமார் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். தற்போது ஆடி மாத காலம் என்பதால் புதுமணத் தம்பதியினர் பிரிந்து சங்கீதா தேவதானத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று ஆடி வெள்ளி என்பதால் குளித்தலை மகா மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு இரவு மீண்டும் வீடு திரும்பி உள்ளனர். குளித்தலை சுங்ககேட் டாஸ்மாக் கடை அருகே வந்தபோது அங்கு இருந்த சசிகுமார் சங்கீதாவை வழிமறித்து தகராறு செய்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தி உள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அவரை வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசார் வசம் ஓப்படைத்தனர்.
இதையும் படிங்க: விடிந்ததுமே சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... மெட்ரோ ரயில் சேவையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!
இதில் வயிறு மற்றும் கழுத்தில் கத்தி குத்தி காயமடைந்த சங்கீதா குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் பொதுமக்கள் அடித்ததில் காயமடைந்த சசிகுமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்... 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் உடல் சிதறி பலி...!