மங்களூரில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்து, யோகா ஆசிரியராக அவதாரம் எடுத்து பின் 2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான "சூப்பர்" என்ற படத்தில் நாகர்ஜுனாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா. அதன் பின் தமிழில் இதுவரை ரெண்டு, அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, தோழா, பாகுபலி 2, எஸ் 3,பிரமாண்ட நாயகன், பாகமதி, சைலன்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அனுஷ்கா ஷெட்டியின் உழைப்பு குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் பல வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியை பார்த்தால் தெரியும். அதில் எமோஷனலாக பேசியிருக்கும் நடிகை அனுஷ்கா, தனது சினிமா கெரியரில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது அருந்ததீ தான். அந்த படத்தில் நான் கமிட் ஆனபோது பலர், இது மிகவும் அருமையான படம் அந்த படத்தில் வரும் கதாநாயகி ரோலுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என கூறிவந்தனர். அதிலும் மிகவும் முக்கியமான ஒருவர் அப்படத்தின் இயக்குனரிடம் "இவ்வளவு பெரிய படம் எடுக்கிறாய். அதில் எதற்கு அனுஷ்கா. அவர் எல்லாம் கவர்ச்சி காட்ட மட்டும் தான் லாயக்கு" என பேசினார். ஆனாலும் எனது இயக்குனர் என் மீது நம்பிக்கை வைத்து படத்தில் நடிக்க வைத்தார். ஆதலால் என் முழு திறமையையும் படத்தில் காண்பித்து அவருக்கு பெருமை சேர்த்தேன் என அனுஷ்கா கூறியிருந்தார். அப்படி தன்னை நம்பி வரும் இயக்குனர்களுக்கு உண்மையாக முழு திறமையையும் காண்பித்து நடித்து கொடுப்பவர் தான் அனுஷ்கா.
இதையும் படிங்க: டீசரே மாஸாக இருக்குன்னா தியேட்டர்ல படம் எப்படி இருக்கும்..! சசிகுமாரின் அடுத்த அவதாரத்தை பார்க்க ரெடியா..!

இப்படி பட்டவரது கெரியர் சிதைந்து போக காரணமும் படம் தான். 'இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா தனது உடல் எடையை அதிகரித்தார். அதன்பிறகு உடற்பயிற்சி, யோகா என பல்வேறு முயற்சிகள் செய்தார். ஆனால் எதுவும் அவருக்கு பலனளிக்க வில்லை. உடல் எடையும் குறைந்த பாடில்லை. குறிப்பாக, பாகுபலி முதல் பாகத்தில் இருந்தது போல, பாகுபலி-2ம் பாகத்தில் அனுஷ்கா ஒல்லியாக வரவேண்டும் என இயக்குனர் ராஜமௌலி எண்ணினார். ஆனால் அனுஷ்கா எவ்வளவோ முயற்சித்தும் ஒல்லியாக முடியாததால் வேறு வழியின்றி அவரை கிராஃபிக்சில் ஒல்லியாக காண்பித்து இருப்பார்.

இதனால் மிகவும் மனவேதனையிலும் மன அழுத்தத்திலும் இருந்த அனுஷ்கா. "அவ்வளவு தான் இனி நம் வாழ்க்கை" என நினைத்து கொண்டிருந்த வேளையில் அவர் வாழ்க்கையில் கடவுளாய் வந்தார் ஒருவர். இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமானால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என கூற, முதலில் தயங்கிய அனுஷ்கா அதன் பின் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டு, நீண்ட நாள் மருத்துவ ஒய்வு பெற்று தற்பொழுது பழைய அனுஷ்காவாக ரசிகர்களுக்கு காட்சியளிக்க தயாராகி இருக்கிறார்.

சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் 'செய்யாறு பாலு' என்பவர் நடிகை நயன்தாரா 'லேடி சூப்பர் ஸ்டார்' பட்டம் வேண்டாம் என்றதற்கு அனுஷ்கா தான் காரணம் எனவும் அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் தெலுங்கு படமான "காதி" படத்தின் டைட்டிலில் அவருக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" என பட்டம் சூட்டப்படதே காரணம் என கூறினார். இதனை அறிந்த நயன்தாரா படக்குழுவினரிடம், "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை அனுஷ்காவுக்கு போடக்கூடாது என எவ்வளவோ வலியுறுத்தியும் படக்குழுவினர் ஒப்புக்கொள்ளாததால் வேறுவழியின்றி தனது பட்டத்தை இழந்தார் நயன்தாரா என தெரிவித்தார்.

இப்படி இருக்க, அனுஷ்காவின் ரீஎன்ட்ரிக்காக தயாராக இருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்காவின் 50-வது படமான 'காதி' திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க போதை பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல தடைகளுக்கு பின் இப்படம் வருகின்ற ஜூலை மாதம் 11ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என எக்ஸ் தளம் வாயிலாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'முத்த மழை' பாடல் பாடி ரசிகர்களின் அன்பு மழையில் நனையும் பாடகி சின்மயி..! தடைகளை நீக்க வலுக்கும் ஆதரவு குரல்கள்..!