சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், பழைய குற்றவாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன், 74. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 4-ம் தேதி குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து வீடு பூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி பத்மநாபனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மாடம்பாக்கம் திரும்பிய பத்மநாபன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த சுமார் 6 சவரன் தங்கச் செயின் மற்றும் வைர கம்மல் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: பைக்கில் வந்தவரை வழிமறித்து கத்தி முனையில் பணம் பறிப்பு! சென்னையில் பரபரப்பு! திருட்டு கும்பல் சிக்கியது எப்படி?
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய மணிகண்டனின் கைரேகையுடன் ஒற்றுமை இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், மணிகண்டன் மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும், செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. வெளியே வந்த பின்னர் நண்பர் சந்தோஷுடன் சேர்ந்து மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருவரிடமிருந்தும் திருடப்பட்டதாக கூறப்படும் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!