ரஷ்யா உக்ரைன் இடையே மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போர் இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. ஏனென்றால், இரு நாடுகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருவதோடு, மறுபுறம் தாக்குதலையும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. ட்ரோன்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், ரஷ்யாவின், 40 போர் விமானங்களை உக்ரைன் தகர்த்துள்ளது. இது, இந்த போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சேதமாக கருதப்படுகிறது. இந்த தாக்குதலில் ரஷ்யாவுக்கு 7 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனின் நகரங்களை குறிவைத்து இரண்டாவது நாளாக நேற்றும் ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தியது. ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் மீது, ரஷ்ய ராணுவம் நடத்திய மிகவும் சக்தி வாய்ந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒன்றரை மாத குழந்தை உட்பட 23 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 18 அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் 13 தனியார் வீடுகள் சேதமடைந்தன. தாக்குதலில் ரஷ்யாவின் 48 டிரோன்கள், இரண்டு ஏவுகணைகள் மற்றும் 4 வான்வழி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல், ஏற்கனவே போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கார்கிவ் நகரை மேலும் நிலைகுலைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: 400 ட்ரோன்கள்.. 40 ஏவுகணைகள்.. உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா தரமான பதிலடி..!

கார்கிவ் ஆளுநர் ஓலே சினிஹுபோவ் கூறுகையில், “40 ட்ரோன்கள், ஒரு ஏவுகணை மற்றும் நான்கு குண்டுகளால் கார்கிவ் நகரில் உள்ள தொழில்துறை வளாகம் ஒன்று தாக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் மக்கள் இருக்கலாம்” என்று தெரிவித்தார்.
இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி உலகெங்கும் எழுந்துள்ள நிலையில், ரஷ்யாவின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைகள், பிராந்திய பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளன. சர்வதேச சமூகம் இந்த தாக்குதல்களைக் கண்டிப்பதுடன், அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

சமீபத்தில் உக்ரைன் மீது மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா, கைதிகள் பரிமாற்றத்தை உக்ரைன் காலவரையின்றி நிறுத்தி வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளது. இதனை மறுத்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுவதாக பதிலுக்கு குற்றம்சாட்டிய நிலையில், நேற்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலை பதிலடி கொடுக்கும் நோக்கில் நடத்தவில்லை என்றும் உக்ரைனை முற்றிலுமாக அழிப்பதே ரஷ்யாவின் நோக்கம் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: போர் நிறுத்தமா? அதுக்கு வாய்ப்பே இல்ல! ட்ரம்பிடம் கொந்தளித்த புதின்.. இனி உக்ரைன் கதி?