பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் வேலை செய்வோரை குறிவைத்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்து வருகின்றன. ஹரியானாவில் யூ-டியூப் சேனல் நடத்தி வரும் ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. நாட்டின் முக்கிய இடங்கள் குறித்த தகவல்கள், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை வீடியோவாக பதிவுசெய்து அதன் மூலமும் பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி வந்துள்ளார்.

அவரை ஹரியானா போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் மட்டும் அவர் உள்பட மொத்தம் 4 பேர் உளவு சொன்ன குற்றத்துக்காக கைதாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 2 பெண்கள், உத்தரப்பிரதேசத்தில் 6 பேர் என இதுவரை மொத்தம் 12 பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து உளவு சொன்ன குற்றச்சாட்டுகளில் கைதாகி இருக்கின்றனர். கைதான 12 பேரில் பெரும்பாலானவர்கள் டில்லியில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவருடன் பழகி, பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர்.
இதையும் படிங்க: CRPF வீரர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை... திருமணத்தால் சிக்கல்; பஹல்காம் தாக்குதலும் காரணம்!!

அங்கிருக்கும்போது பல வசதிகளை அனுபவித்திருக்கின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த தகவல்களையும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அவர்கள் வரிசையில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக CRPF எனப்படும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் மோதி ராம் ஜாட் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்து உள்ளனர்.

இவர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை, பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரிகளுக்கு பகிர்ந்து வந்துள்ளார். கடந்த 2023ல் இருந்து, உளவு பார்க்கும் வேலையை மோதி ராம் செய்து வந்துள்ளார். அதற்காக, பாகிஸ்தானில் உள்ள இந்திய வம்சாவளியினர் மூலம் பல வழிகளில் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பணியில் இருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு இருக்கிறார்.
மோதி ராமின் சோஷியல் மீடியா பக்கங்களை மத்திய புலனாய்வு அமைப்புடன் சேர்ந்து சிஆர்பிஎப் கண்காணித்தபோதுதான் அவர் விதிமுறைகளை மீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மோதி ராமை ஜூன் 6 வரை என்ஐஏ கஸ்டடியில் விசாரிக்க சிறப்பு கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் தேச விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. யு டியூபர் ஜோதி மல்கோத்ரா உட்பட ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 12 உளவாளிகள் இதுவரை பிடிபட்டு உள்ள நிலையில், சிஆர்பிஎப் வீரரும் சிக்கியுள்ளார்.
இதையும் படிங்க: என் ரத்தம் கொதிக்குது..! கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க.. குஜராத்தில் மோடி ஆவேசம்..!