குஜராத்தில் பிரதமர் மோடி இன்றும் நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் இன்று வாகன பேரணியை நடத்தினார். அதற்காக, அலங்காரங்கள், தோரணங்கள் அமைப்பு, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்த வாகன பேரணியின்போது, திறந்த காரில் நின்றபடி பிரதமர் மோடி சாலை வழியே சென்றார். அப்போது, திரண்டிருந்த பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பூக்களை தூவி அவரை வரவேற்றனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முன்னின்று நடத்திய இந்திய ராணுவ பெண் அதிகாரி கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் இந்த பேரணியில் இணைந்து கொண்டனர்.

பின்னர், தாஹோத் மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு இந்திய ரயில்வே துறையின், இன்ஜின் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்தார். மேலும், அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட 9 ஆயிரம் ஹெச்.பி. திறன் கொண்ட எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த எலக்ட்ரி ரயில் இன்ஜின்களானது, இந்திய ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதத்தை எதிர்த்து போராட புதிய நம்பிக்கை.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பிரதமர் மோடி..!

தொடர்ந்து குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் நாடு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற, இந்தியர்கள் 140 கோடி பேரும் பாடுபடுகிறார்கள். இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

உலக அளவில் உற்பத்தி துறையில் இந்தியா முன்னேறி வருகிறது. இன்று (மே 26) இதே தேதியில் 2014ம் ஆண்டு நான் முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்றேன். குஜராத் மக்கள் என்னை ஆசீர்வதித்தனர். பின்னர் கோடிக்கணக்கான இந்தியர்கள் என்னை ஆசீர்வதித்தனர். நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஹோலி, தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட்போன்கள், வாகனங்கள், பொம்மைகள், ஆயுதங்கள், மருந்துகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறோம்.

இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம். குஜராத்தில் ரயில்வே நெட்வொர்க்கின் 100 சதவீத மின்மயமாக்கல் நிறைவடைந்துள்ளது. நான் இங்கு வருவதற்கு முன்பு வதோதராவில் இருந்தேன், ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வந்திருந்தனர்.அவர்கள் இந்திய ஆயுதப் படைகளைக் கொண்டாட வந்திருந்தனர். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு.

மோடியை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை பயங்கரவாதிகள் கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். பஹல்காம் தாக்குதலின் படங்களைப் பார்த்து ரத்தம் கொதிக்கிறது. எனவே நம் நாட்டு மக்கள் விரும்பியதைச் செய்தேன். மக்கள் தான் என்னை பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். நாளை காந்திநகரில் உள்ள மஹாத்மா மந்தீரில் ரூ.5,536 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1,006 கோடியில் கட்டப்பட்ட 22,000 குடியிருப்புகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். காந்திநகரில் உள்ள யூ.என்., மேக்தா இருதயவியல் கல்வி நிறுவனத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதையும் படிங்க: இதுதான் ரைட் டைம்! பாக்., பண்ண காரியத்துக்கு பதிலடி கொடுத்தே ஆகணும்! அமெரிக்காவில் முழங்கிய சசி தரூர்!