நேபாளத்தில் 2008ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்து, மதச்சார்பற்ற கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாறிய பிறகு, அரசியல் ஸ்திரமின்மை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 17 ஆண்டுகளில் 13 முதல் 14 அரசாங்கங்கள் மாறியுள்ளன, இது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை கடுமையாக பாதித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களிடையே பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பின்னணியில், தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் ஆட்சியில் மக்களின் ஏமாற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் விளைவாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புதிய தலைமுறை போராட்டங்கள் தோன்றியுள்ளன. இன்று காத்மாண்டு உள்ளிட்ட நேபாளத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் திரண்டு, ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்கள் ஜெனரல் Z போராட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை பெரும்பாலும் இளைய தலைமுறையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.

இவர்கள் அரசின் ஊழல் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஹத்யாரா சர்க்கார் என்று முழக்கமிட்டு, அரசின் வன்முறை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நீதி கோரினர். குறிப்பாக, நேற்று நடந்த மோதல்களில் 19 ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த உயிரிழப்புகள் மக்களின் கோபத்தை மேலும் தூண்டியதால், இன்று போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன.காத்மாண்டுவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் நேபாள காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்திற்கு தீ வைத்தனர். மேலும், அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநரின் இல்லங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: இளைஞர்கள் போராட்டத்திற்கு பணிந்த நேபாள அரசு.. தடையை நீக்கி அதிரடி உத்தரவு..!!
இந்த நிலையில், ராணுவ படையினர் தடுத்தும் அதனைப் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தீ வைத்தனர். இதனால் நாடாளுமன்ற வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. நேபாளத்தில் போராட்டம் மற்றும் வன்முறை தீவிரமடைந்த நிலையில் காத்துமாண்டுவில் அனைத்து விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. விமான நிலையத்திற்கு அருகே போராட்டக்காரர்கள் பல இடங்களுக்கு தீ வைத்ததால் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. காத்துமாண்டு விமான நிலையத்தில் தலை இறங்க முடியாமல் ஏர் இந்தியா இண்டிகோ விமானங்கள் தவித்து வருகின்றன.
இதையும் படிங்க: #BREAKING சோசியல் மீடியாக்களுக்குத் தடை... போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி...!