சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள புனித எலியாஸ் தேவாலயத்தில் நேற்று மாலை மக்கள் சுமார் 350 பேர் ஒன்றுகூடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் Daesh குழுவை சேர்ந்த ஒருவர், தனிநபராக மக்களோடு மக்களாக இருந்து எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். மேலும் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தி உள்ளார்.

இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எகிப்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜோர்டான் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த நேரத்தில் சிரியாவுக்கு ஆதரவாக நிற்பதாகவும் கூறியுள்ளன. ஐ.நா அமைப்பின் பிரதிநிதியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று சில உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையும் படிங்க: துருக்கியில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்.. பால்கனி வழியாக குதித்து தப்பிய மக்கள்.. கிரிஸ், சிரியாவிலும் பாதிப்பு..!
சம்பவம் நடந்த இடத்தில் தேவாலயத்தின் மரப்பலகைகள் சரிந்து விழுந்ததாகவும், அந்த இடத்தின் தரைப்பகுதி முழுவதும் ரத்தம் சிதறி இருந்ததாகவும் சர்வதேச செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது சிரியா அரசு.

இத்தகைய துயர சம்பவம் நடைபெற்ற தேவாலயத்தை நேரில் பார்வையிட்ட கிறிஸ்தவ மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹிந்த் கபாவத், அங்கிருந்த மதப் போதகர்களை நேரில் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நேரில் பார்த்த தேவாலயத்தின் பாதிரியார் ஃபாடி கட்டாஸ் கூறுகையில், “மக்கள் அனைவரும் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். சுமார் 350 பேர் இங்கு கூடியிருந்தனர். அதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதை நான் நேரில் பார்த்தேன்” என்று வேதனையுடன் அவர் கூறியிருக்கிறார்.
அந்நாட்டின் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட கிளர்ச்சிப் படையினர் கடந்த டிசம்பரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதன் பின்னர் இப்போதுதான் டமாஸ்கஸ் நகரில் முதல்முறையாக இந்த வகையிலான தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு அங்கு கிளர்ச்சிப் படையினரின் புரட்சி தொடங்கியது.

தற்போது சிரியாவில் ஆட்சியாளர்களின் வசம் உள்ள முக்கிய சவால் என்னவென்றால் அது பாதுகாப்பு விவகாரம்தான். அங்குள்ள சிறுபான்மையின மக்களை அரசு பாதுகாக்க வேண்டும் என சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!