பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில், காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காசாவுக்கு மற்ற நாடுகள் அனுப்பும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு பசி, பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கிடைக்கும் உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு இந்தியாவில் மலிவு விலையில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதாவது ரூ.2400க்கு விற்கப்படுகிறது. இந்த விலைவாசி உயர்வால் காசா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்ககிட்ட மோதாதீங்க! எதிர்பார்க்காத அளவுக்கு பதிலடி இருக்கும்! ஈரானை கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்..!

மேலும் தொடர்ந்து நடந்து வரும் போரால் காசா முனையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காசாவுக்கு பல்வேறு நாடுகள் நிவாரண பொருட்கள் அனுப்பி வரும் நிலையில், அவற்றை அனைத்தும் அமெரிக்காவின் மேற்பார்வையில் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் (Gaza Humatarian Foundation - GHF) மூலமே செய்யப்படுகிறது. இந்த அமைப்பு இஸ்ரேல் படையினரால் பாதுகாக்கப்படுகிறது.

இந்நிலையில், காசாவில் நேற்று நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டபோது, அங்கு ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவித்தனர். அப்போது, இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 38 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பட்டினியின் விளிம்பில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மனிதாபிமான உதவிகளை அணுக முயன்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று நடந்த உயிரிழப்புகள் குறித்து இஸ்ரேலிய ராணுவம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அதிகாலை 4 மணியளவில் இஸ்ரேலியப் படைகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சிலர் தெரிவித்தனர். இருப்பினும், இஸ்ரேலியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாக உணவு மையங்களை அடைய முயற்சிக்கும் பாலஸ்தீனியர்கள் மீது அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: பற்றி எரியும் போர் பதற்றம்.. ஈரான் - இஸ்ரேல் தலைநகரங்களுக்கு நீடிக்கும் ஆபத்து!