அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தினார். அதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதனிடையே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருந்தபோதிலும் டிரம்ப் நாடு கடத்துவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தவும், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையை மூடவும் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

மேலும், ஒரு நாளைக்கு 3,000 புலம்பெயர்ந்தோரை கைது செய்யுமாறு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவுக்கு (ICE) உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான டிரம்ப்பின் உத்தரவால், லாஸ் ஏஞ்சல்ஸில் கலவரம் ஏற்பட்டது. சட்டவிரோத குடியேற்ற அதிகாரிகளால் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை போராட்டங்கள் தொடங்கின. கூட்டத்தினர் நெடுஞ்சாலையை மறித்து வாகனங்களுக்கு தீ வைத்தனர். காவல்துறையினர், கண்ணீர் புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.
இதையும் படிங்க: புதினிடம் ஒரு மணி நேரம் போனில் பேசிய டிரம்ப்... எதை பற்றி பேசினார்கள்? வெளியான முக்கிய தகவல்!!

அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் லாஸ் ஏஞ்சல்ஸில் மேலும் 2,000 தேசிய காவல்படை வீரர்களும், 700 கடற்படையினரும் விரைந்துள்ளனர். டிரம்ப் குடியேற்ற சட்டங்களை கடுமையாக்கியதால், கடந்த மூன்று நாட்களாக நடந்த போராட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வன்முறை வெடித்தது. இந்த சட்டம் புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களைப் பிரிப்பதாக போராடுவோர், கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும், கடற்படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோ, சாண்டா அனா (கலிபோர்னியா) மற்றும் டல்லாஸ், ஆஸ்டின் (டெக்சாஸ்) உள்ளிட்ட பல நகரங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் மற்றும் கவர்னர் ஆகியோர் டிரம்ப்பின் கருத்தை மறுத்துள்ளனர். காவல்துறையினருக்கு ராணுவத்தின் உதவி தேவையில்லை என்றும், மக்களின் பாதுகாப்பை டிரம்ப் கேள்விக்குறியாக்குவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: டிரம்பிடம் மோடி சரணடைந்துவிட்டார்... லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு!!