தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகளும், அரியணைக்கு தகுதியானவர்களில் ஒருவருமான இளவரசி பஜ்ரகித்தியபா நரேந்திர தேப்யவதி (47) கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையில் இருந்து வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார். அரண்மனை அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இளவரசியின் மரணம் தாய்லாந்து மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசி பஜ்ரகித்தியபா, 1978-ம் ஆண்டு பிறந்தவர். தாய்லாந்தின் முன்னாள் மன்னர் பூமிபால் அடுல்யாதேஜின் முதல் பேரக்குழந்தை. கொர்னெல் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், வழக்கறிஞர், வழக்குரைஞர் மற்றும் தூதராகவும் பணியாற்றினார். ஐ.நா. பெண்கள் அமைப்பின் தேசிய தூதராகவும், தென்கிழக்கு ஆசியாவில் சட்ட ஆட்சிக்கான ஐ.நா. நல்லெண்ண தூதராகவும் பொறுப்பு வகித்தார்.
குறிப்பாக, சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் உரிமைகளுக்காக இளவரசி தீவிரமாகப் பாடுபட்டார். “கம்லாங்ஜாய்” (Kamlangjai - Inspire) திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண் கைதிகள் உட்பட பலருக்கு மறுவாழ்வு உதவிகளை வழங்கினார். ஐ.நா.வில் “பாங்காக் விதிகள்” (Bangkok Rules) எனப்படும் பெண் கைதிகளுக்கான சர்வதேச வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இவரது முயற்சிகள் உலகளவில் பெண் கைதிகளின் நிலையை மேம்படுத்த உதவின.
இதையும் படிங்க: ”அந்த சத்தம்...” - தமிழக மக்கள் பாடும் பாட்டு கேட்கலையா விஜய் அண்ணா?... வறுத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!
திடீர் உடல்நலக் குறைவு: 2022 டிசம்பர் 14-ம் தேதி, நகோன் ரட்சசிமா மாகாணத்தில் ராணுவ நாய் பயிற்சி போட்டிக்காக தனது நாய்களுடன் உடற்பயிற்சி செய்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு விழுந்தார். மயோப்ளாஸ்மா தொற்று காரணமாக இதயத் துடிப்பு கோளாறு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளவரசி, பின்னர் பாங்காக்கில் உள்ள சுலாலோங்கோர்ன் (Chulalongkorn) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கோமா நிலையில் இருந்த இவருக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளுக்கு உபகரணங்கள் உதவின. கடந்த மே மாதம் 21-ம் தேதியிலிருந்து வயிற்றுப் பகுதி தொற்று (குடல் அழற்சி), குறைந்த இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு கோளாறு மற்றும் இரத்த உறைதல் பிரச்சினைகள் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவக் குழு முழு முயற்சியுடன் சிகிச்சை அளித்தபோதிலும், ஜூன் 11-ம் தேதி இரவு 7:48 மணிக்கு (உள்ளூர் நேரம்) இளவரசி அமைதியாக உயிர் துறந்தார்.
தேசிய சோகம்: இளவரசியின் மரணச் செய்தியறிந்ததும், தாய்லாந்து முழுவதும் பெரும் சோகம் நிலவுகிறது. பல தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மன்னர் வஜிரலோங்கோர்ன் இளவரசியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். கிராண்ட் பேலஸில் உயரிய முறையில் இறுதி சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளவரசி பஜ்ரகித்தியபா, அரச குடும்ப உறுப்பினராக மட்டுமின்றி, சமூக சேவகியாகவும், மனித உரிமை ஆர்வலராகவும் தாய்லாந்து மக்களின் இதயங்களில் இடம்பிடித்திருந்தார். அவரது இழப்பு தாய்லாந்தின் அரசியல் மற்றும் சமூகத் துறையில் கணிசமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான மற்றும் அர்ப்பணிப்பு மிக்க அவரது வாழ்க்கை, எதிர்கால தலைமுறையினருக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும்.
இதையும் படிங்க: ஏர் இந்தியா விமான விபத்து! ஓராண்டு கடந்தும் மாறாத ரணம்! விலகாத மர்மம்! கிடைக்காத நீதி?!