தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் சுமார் ஐந்து மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
காலையிலிருந்தே யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை இருந்து விமானம் மூலம் மதியம் தூத்துக்குடி வந்தனர்.
அவர்கள் வந்த வாகனத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைய காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பே இறங்கி அங்கிருந்து பேரணியாக நடந்துவந்தனர். அவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இணைந்தனர்.
இதையும் படிங்க: "இரட்டை குதிரை சவாரியா?" – திருமாவளவனை மறைமுகமாக தாக்கிய வைகோ! கூட்டணியில் வெடித்த புதிய சர்ச்சை!
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தைச் சுற்றி நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு, யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதில், முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு மட்டும் முதல் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக நுழைவாயிலிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இறுதி தடுப்பில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது, "நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். கைது செய்யப்பட்டுள்ள எங்கள் சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு, "மேல் அதிகாரிகளின் உத்தரவின்படி யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது" என்று காவல்துறை தெரிவித்தது. "அந்த மேல் அதிகாரிகள் யார்?" என்று கேட்டபோதும், காவல்துறை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் தள்ளியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் மற்றும் கீதா ஜீவன் உள்ளிட்டோர் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் “அனிதா ராதாகிருஷ்ணன் மீது கைவைத்தால் வேலை காலியாகிடும்” என போலீசாரை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, திமுக நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
"மார்க்கண்டேயனை சந்திக்க அனுமதி வழங்கினால் மட்டுமே நாங்கள் எழுந்து செல்வோம்; இல்லையெனில் கைது செய்ய முடியாது" என்று முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்ததால், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தற்போது, முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி, பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறை தரப்போ, "யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது" என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இதனால், "மார்க்கண்டேயனிடம் என்ன விசாரணை நடத்தப்படுகிறது? அவரது நிலை என்ன என்பதை பார்க்காமல் செல்ல முடியாது" என்று திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காலையிலிருந்து ஒரே ஒரு வழக்கறிஞருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், மற்ற யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் திமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை முன்னிட்டு நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, இறுதி பாதுகாப்பு வளையத்தை தாண்டி யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்விட்டா.? தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்துகள்.? வலுக்கும் விமர்சனம்..!!