ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து ஐந்தாவது இரவாகவும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் ராணுவத்தின் திறனை பலவீனப்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய இடங்களை குறிவைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புதிய கட்ட தாக்குதல்கள் மதியம் 2 மணி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள்; போர் பதற்றம் உச்சம்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான உறவு பல ஆண்டுகளாக பதற்றமான நிலையிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக, பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய நாணய அமைப்பை உருவாக்கும் முயற்சி, ரஷ்யாவுடன் பாதுகாப்பு மற்றும் ஆயுதத் துறையில் ஒத்துழைப்பை அதிகரித்தது, அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டது, மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஊக்குவித்தது, மேலும் யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது போன்ற காரணங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை தீவிரப்படுத்தியதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சூழலில், முதலில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் வெடித்தது. பின்னர் அமெரிக்காவும் நேரடியாக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்து, உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் அதிர்வலைகள் ஏற்பட்டன.
கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்டிருந்த எண்ணெய்கூட ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த முக்கிய கடல் பாதையில் ஈரான் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
உலகளவில் கடல் வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறுவதால், அந்தப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் சர்வதேச சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து பல்வேறு உலக நாடுகள் போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தின. அதன் தொடர்ச்சியாக அமைதி ஒப்பந்தத்திற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், அந்த அமைதி முயற்சிகளுக்கு இடையே மீண்டும் அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இன்று ஐந்தாவது இரவாகவும் ஈரானின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை ஈரான் அதிகாரப்பூர்வமாக பதிலடி கொடுக்கவில்லை. இருப்பினும், தேவையான நேரத்தில் பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஈரான் தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல்... டிரம்ப் கடும் எச்சரிக்கை; நெதன்யாகுவும் அதிரடி!