சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) அதிரடியானக் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தின் வலிமையே உலக அமைதிக்குக் காரணம் என்று அவர் வாதிட்டுள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய பீட் ஹெக்செத் உலகில் ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டிய ஒரே நிறுவனம் அமெரிக்க ராணுவம்தான். எங்கள் ராணுவத்தின் பலத்தால்தான் உலகம் இன்னும் பாதுகாப்பாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் சூழலில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஏற்கனவே அமெரிக்கா தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முற்றுகை மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது: ஈரானியக் கப்பல்களை முற்றுகையிடும் பணியில் (Naval Blockade), ஏற்கனவே உள்ள படைகளுடன் மேலும் ஒரு விமானம் தாங்கிப் போர் கப்பல் (Aircraft Carrier) இணைய உள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார். ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்கி, அவர்களைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைப்பதே இதன் நோக்கம் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணை எங்கள் வசம்! ஈரானை எச்சரித்து டொனால்ட் டிரம்ப் பதிவு!
அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வுகள் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன கடல் எல்லையை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளதுடன், தடையை மீற முயலும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் கடல்வழித் தடைகள் காரணமாக, இந்தியர்கள் உட்படப் பல நாட்டு மக்கள் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.
அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், 'வலிமையின் மூலம் அமைதி' (Peace through Strength) என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஈரானுடன் ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த ராணுவ முற்றுகை தளர்த்தப்படாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்! இந்தியா வந்துகொண்டிருந்த கப்பல் உள்பட 2 கப்பல்களை சிறைபிடித்தது ஈரான் !