ஈரான் இஸ்ரேல் இடையிலான போர் இன்று 5வது நாளை எட்டியிருக்கிறது. கடந்த வெள்ளி அதிகாலை ஈரானில் இஸ்ரேல் ராணுவம் ஆபரேஷன் ரைசிங் லயன் என்கிற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது. அணு ஆயுத தயாரிப்பு கூடங்கள், முக்கிய ராணுவம் மையங்கள், எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்கியது.
இதில், ஈரான் நாட்டின் 7 முக்கிய ராணுவ தளபதிகள், 9 அணு விஞ்ஞானிகளை ஒரே நாளில் இஸ்ரேல் தீர்த்து கட்டியது. தலைமை தளபதிகள் ஹுசைன் சலாமி, முகம்மது பகேரி, கோலம் அலி ரஷீத், தளபதிகள் ஆமிர் அலி ஹஜிசாதே, அலி ஷம்கானி, கோலம்ரசா மெஹ்ரபி, மெஹ்தி ரப்பானி ஆகிய 7 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். மேஜர் ஜெனரல் கோலம் அலி ரஷீத் ஈரான் ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருந்தார்.

ராணுவ தலைமையகத்தில் போர்க்கால படைத்தளபதி பொறுப்பையும் கோலம் அலி ரஷித் வகித்தார். இஸ்ரேல் தாக்குதலில் கோலம் அலி ரஷித் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஈரானுக்காக போர் புரியப்போகும் அடுத்த தளபதி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. உயிர் தியாகம் செய்த ரஷீத்துக்கு பதிலாக அலி சட்மானியை போர்க்கால தளபதியாக நியமித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிவிப்பு வெளியிட்டார்.
இதையும் படிங்க: அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!
ராணுவத்தில் அலி சட்மானியின் சிறப்பான சேவையை கருத்தில் கொண்டு அவருக்கு மேஜர் ஜெனரல் ஆக அலி கமேனி பதவி உயர்வு கொடுத்தார். ராணுவ தலைமையகத்தில் போர்க்கால படை தளபதி பொறுப்பையும் அளித்தார்.

13ம் தேதி அலி சட்மானியை போர்க்கால தளபதியாக அலி கமேனி நியமித்தார். ஆனால், 4வது நாளில் அவரது கதையையும் இஸ்ரேல் ராணுவம் முடித்தது. தெஹ்ரானில் உள்ள ஈரான் ராணுவ தலைமையகத்தின் போர்ப்படை பிரிவு மீது இஸ்ரேல் நேற்றிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில், போர்க்கால படைத் தளபதி அலி சட்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. சொல்லி வைத்தது போல, 4 நாள் இடைவெளிக்குள் ஈரானின் 2 போர்க்கால படை தளபதிகளை இஸ்ரேல் போட்டுத் தள்ளியது ஈரானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஈரானை ஒப்பிடும்போது, மிகவும் குட்டி நாடான இஸ்ரேலின் படை வலிமையை பறைசாற்றுவதாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.

இதுபற்றி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அலி சட்மானி ஈரானின் மிக முக்கிய ராணுவத் தளபதி மட்டுமல்ல, ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமான நம்பகமான ராணுவ அதிகாரியாகவும் இருந்தார். ஈரானின் போர் நடவடிக்கைகள் மற்றும் முக்கிய போர் திட்டங்கள் தொடர்பான முக்கிய முடிவுகளை அலி சட்மானிதான் எடுத்துவந்தார். இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் திட்டங்களுக்கு முக்கிய மூளையாக இருந்ததும் அலி சட்மானிதான் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!