ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்காவும், இஸ்ரேலும் அச்சுறுத்தலாக பார்த்தன. ஈரானை தொடர்ந்து எச்சரித்து வந்தன. அமெரிக்காவுடன் இது தொடர்பாக ஈரான் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஈரான் மீது இஸ்ரேல் போரை துவங்கியது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த போர் வெடித்தது.
அன்று முதல் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரில் இதுவரை நேர்ந்த சேதம் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஈரான் மீது முதல் நாள் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில், அந்த நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டது.
அதன் அணு ஆராய்ச்சி மையங்கள், ராணுவ தளங்கள் குண்டு வீசி நொறுக்கப்பட்டன. ஈரானின் சக்தி வாய்ந்த ஏவுகணை தயாரிப்பு மையங்கள், சேமிப்பு கிடங்குகளும் சேதம் அடைந்தன. முக்கிய அணு விஞ்ஞானிகள் 9 பேர் கொல்லப்பட்டனர். உச்ச தலைவர் கமெனிக்கு அடுத்த இடத்தில் இருந்த ஈரானின் பிரதான படை தளபதி முகமது பகேரி, ஈரான் புரட்சிகர ராணுவ படை தளபதி சலாமி உட்பட 6 தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்.. மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

பின்னர் சீரான இடைவெளியில் இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானில் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதை ஈரானால் பெரிய அளவில் இடைமறிக்க முடியவில்லை. இதனால் தினமும் சேதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. உச்ச தலைவர் கமெனியின் உதவியாளர் உட்பட மேலும் பல முக்கிய தளபதிகளை இஸ்ரேல் கொன்றது. தற்போதைய நிலவரப்படி ஈரானில் 585 பேர் கொல்லப்பட்டு இருந்தனர். 1300 பேர் பலத்த காயம் அடைந்திருந்தனர்.
நேற்று மாலையிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தின. இதில் ஈரான் ராணுவத்தின் உளவு பிரிவு தலைமை அலுவலகம் குண்டு வீசி தகர்க்கப்பட்டது. இதில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற தகவல் உடனடியாக வெளியே வரவில்லை. எனவே ஈரானில் ஏற்பட்ட மரணம் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது.
அதே நேரம் இஸ்ரேலுக்கு இவ்வளவு சேதம் இல்லை. இஸ்ரேல் மீது இதுவரை 1000 ட்ரோன்களையும் 400 சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் ஈரான் ஏவி இருக்கிறது. மொத்தம் 11 ரவுண்ட் தாக்குதல் நடத்தி உள்ளது.

இதில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500 பேர் வரை காயம் அடைந்து இருக்கின்றனர். இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளங்கள் எதுவும் தகர்க்கப்படவில்லை. சில குடியிருப்பு பகுதிகளில் மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரான் வீசிய 400 ஏவுகணைகளில் 380-ஐ நடுவானிலேயே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் கூறி உள்ளது. அதே நேரம் 20 ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் தடுப்பு கவசங்களை ஊடுருவி தாக்கி உள்ளது. இவை புறநகர் பகுதியில் விழுந்து வெடித்ததாகவும், இதில் தான் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.
அதே போல் ஈரான் ஏவிய 1000 ட்ரோன்களில் வெறும் 200 ட்ரோன்கள் மட்டுமே இஸ்ரேலின் வான் எல்லைக்குள் நுழைந்தன. அவற்றில் ஒரு ட்ரோன் கூட இஸ்ரேலில் சேதத்தை ஏற்படுத்தவில்லை.

எல்லாவற்றையும் வானிலேயே தாக்கி அழித்து விட்டோம் என்று இஸ்ரேல் கூறி உள்ளது. இதற்கிடையே டிரம்ப், கமெனி இடையே வார்த்தை போர் வெடித்து உள்ளது. விரைவில் அமெரிக்காவும் நேரடியாக களத்தில் இறங்கும் என்று அஞ்சப்படுகிறது. அப்படி நடந்தால் ஈரான் பேரிழப்பை சந்திக்க கூடும் என்று சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: 10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்! வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!