ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடங்களிலும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசியது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் மூலம் இந்தியா முறியடித்தது.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய ராணுவம் லாகூர், கராச்சி நகரங்களில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.
இதையும் படிங்க: இந்தியா-பாக். பதற்றம்: நாடாளுமன்ற குழுவிடம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி 19ம் தேதி விளக்கம்..!

இதனிடையே ட்ரம்ப் மத்தியஸ்சம் குறித்தும், போர் நிறுத்தம் குறித்து இந்தியா - பாக்., அறிவிக்கும் முன்னரே ட்ரம்ப் அறிவித்தது குறித்தும் சர்ச்சையானது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆப்பரேஷன் சிந்துார் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடியும், அமெரிக்காவின் மத்தியஸ்த நடவடிக்கையால் அணு ஆயுத போர் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், போரை நிறுத்தாவிட்டால் இந்தியா-பாக்., உடனான வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்படும் என கூறியதை அடுத்து, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, நான் பதவி ஏற்ற நாளிலேயே போரை நான் விரும்ப மாட்டேன் என்று கூறினேன். அதனால்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த சண்டையை நான் பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தினேன். வர்த்தகத்தை முன்னிருத்தி இந்த உடன்பாட்டை எட்டவைத்தேன். 'நண்பர்களே, வாருங்கள். ஒரு ஒப்பந்தம் செய்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம் என்று அவர்களிடம் நான் கூறினேன்.

அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை வர்த்தகம் செய்வோம் என்றேன். அவர்கள் இருவரும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள், மிகவும் வலுவான தலைவர்கள், நல்ல தலைவர்கள், புத்திசாலித் தலைவர்கள். எனவே சண்டையை நிறுத்திவிட்டார்கள். சிறியதாகத் தொடங்கிய போர் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை உருவாகி இருந்தது என்றார். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தது பிரச்னையாகி வரும் நிலையில், அவர் மீண்டும் அதே கருத்தை தெரிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பூதாகரமாகி உள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டா? 10 நிமிடம் நையப்புடைத்த போலீசார்.. அரை நிர்வாணமாக்கி ரோட்டில் ஊர்வலம்..!