ஹிமாசல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று ஜாஹுவிலிருந்து மண்டிக்குச் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து மண்டியில், பத்ரிகாட் பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதை அடுத்து பேருந்து 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பேருந்து கவிழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரபிக்கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பல்.. சிக்கியவர்களின் நிலைமை என்ன..?

அப்பகுதியில் பெய்த கனமழையால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நெர்ச்சோக் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மண்டியின் கூடுதல் துணை ஆணையர் மதன் குமார் விபத்து சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்தனர். 25 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலர் பேருந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்து - டெம்போ டிராவலர்... பறிபோன 4 உயிர்கள்; தஞ்சையில் பயங்கரம்!!