அகமதாபாத்தில் கடந்த வாரம் நடந்த கோர விபத்துக்குப் பிறகு, போயிங் நிறுவனத்தின் 787-8 ட்ரீம்லைனர் விமானங்கள் மீதான சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற AI 171 விமானம் புறப்பட்ட 40 வினாடிகளுக்குள் விபத்தில் சிக்கியது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வீடியோவில், அந்த விமானம் போதிய உயரத்தை அடைய முடியாமல் தடுமாறியது.

சுமார் 650 அடி வரை மட்டுமே சென்ற ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி பலியாகினர். இறந்தவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி சோகத்தை கூட்டி விட்டன. மேலும் மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தவர்கள் என பலரும் இந்த துயர சம்பவத்தில் சிக்கியதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவுக்கு சிக்கல்.. தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்..!

மேலும் விபத்து குறித்து உயர்மட்டக்குழு விசாரணை நடத்துகிறது. இதற்கிடையே ஏர் இந்தியா இன்று ஒரே நாளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6 சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது. இன்று ஒரே நாளில் AI 915 (டெல்லி-துபாய்), AI 153 (டெல்லி-வியன்னா), AI 143 (டெல்லி-பாரிஸ்), AI 159 (அகமதாபாத்-லண்டன்), AI 133 (பெங்களூரு-லண்டன்) மற்றும் AI 170 (லண்டன்-அமிர்தசரஸ்) ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதோடு மட்டுமின்றி, நேற்றைய தினம் ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட AI 315 ட்ரீம்லைனர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மீண்டும் ஹாங்காங்கிற்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ட்ரீம்லைனர் விமானங்களின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. சிவில் ஏவியேஷன் அமைப்பின் உத்தரவைத் தொடர்ந்து சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!