அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியது. விமானம் புறப்பட்ட அடுத்த நிமிடமே மே டே கால் எனும் அவசர அழைப்பு வந்தது. அழைப்பு வந்த ஒரு சில வினாடிகளிலேயே அழைப்புத் துண்டிக்கப்பட்டு விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர், ஒரு கனடா நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டவர் என சொல்லப்படுகிறது.

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்ததால் அந்த கட்டடம் தீப்பற்றி எரிந்ததாக சொல்லப்படுகிறது. இதில் விடுதி அறையில் தங்கியிருந்த 25 மாணவர்கள் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்துள்ளார். இதையடுத்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது. மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குஜராத் விமான விபத்து; உத்தரவிட்ட பிரதமர் மோடி… டக்கென கிளம்பினார் அமித் ஷா!!

விமான விபத்தில் விமானத்தில் 11 ஏ இருக்கையில் பயணித்த விஸ்வாஷ் குமார் என்ற பயணி உயிர் தப்பியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார். அங்கு விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபரான, பிரிட்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் குமாரை மருத்துவமனையில் சந்தித்தும் நலம் விசாரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா. பின்னர் மீட்புப்பணிகள் மற்றும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணுவது ஆகிய பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விபத்தில் சிக்கியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன், பிரதமர் மோடி உடனடியாக என்னை அழைத்து விபத்து குறித்து கேட்டறிந்தார். விமான விபத்தில் பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, உயிரிந்தோரின் குடும்பங்களுக்கு துணையாக இருப்போம். விமான விபத்தில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்தேன். உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகே சொல்ல முடியும். விடுதி கட்டடம் இடிந்ததில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: நொறுங்கிய விமானம்.. என்னதான் ஆனது? விபத்து தொடர்பாக தொடர்ந்து கேட்டறியும் பிரதமர் மோடி..!