பிரிட்டிஷ் கடற்படையின் விமானம் தாங்கி போர் கப்பலில் இருந்து புறப்பட்ட F-35 ரக போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதையும், மீண்டும் போர் கப்பலுக்கு செல்ல போதுமானதாக இருக்காது என்பதையும் பைலட் கவனித்துள்ளார். வேறு வழியில்லாமல் அருகில் உள்ள கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச ஏர்போர்ட்டில் தரை இறங்க அனுமதி கோரினார். உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.
விமானம் சீராகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்குவதை உறுதி செய்ய ஏர்போர்ட் அதிகாரிகள் அவசர நிலையை அறிவித்தனர். நேற்றிரவு 9.30 மணியளவில் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தற்போது திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி பெற்றவுடன் எரிபொருள் நிரப்பப்படும் என தெரிகிறது.

இந்த F-35 ரக விமானம், குறுகிய தூரத்தில் டேக் ஆப் ஆகி, செங்குத்தாக தரையிறங்கும் திறன்களுக்கு பெயர் பெற்ற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம். இது சமீபத்தில் இந்திய கடற்படையுடன் இணைந்து கூட்டு பயிற்சிகளை நடத்தியது. இந்த விமானம், வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் அமைதியற்ற சூழலை கருத்தில் கொண்டும், கடற்கொள்ளையர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தெரியாம நடந்த தப்பு இது.. மன்னிச்சுருங்க.. இந்தியாவிடம் SORRY சொன்ன இஸ்ரேல்..!
முன்னதாக குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடத்தில் கட்டடத்தில் விழுந்து நொறுங்கியது. அரசு டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் விமானம் விழுந்ததில், அதில் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர, பயணிகள், பணியாளர்கள் உட்பட 241 பேரும் இறந்தனர். இதில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை உத்தராகண்ட் மாநிலத்தின் புனிதத்தலமான கேதார்நாத்தில் இருந்து குப்தகாஷிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர் ஒன்று ருத்ரபிரயாகையை கடக்க முயன்றபோது பெரும் விபத்துக்குள்ளானது. ருத்ரபிரயாகின் கவுரிகுண்ட் வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், ஹெலிகாப்டர் விமானி, பயணிகள் என 7 பேர் பலியாகினர். இது போன்ற சம்பவங்களுக்கு மத்தியில் கேரளாவில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்ட போர் விமானம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இஸ்ரேல் ஈரான் சண்டையால் இந்தியாவில் பாதிப்பு.. தாயகம் திரும்பும் விமானங்கள்..!