1985ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் குண்டு வெடித்து 329 பேரை பலி கொண்ட கொடூர சம்பவத்திற்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள்தான் காரணம் என கனடா உளவுத்துறை அதிகாரிகள் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த அறிவிப்பு 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1985 ஜூன் 23ஆம் தேதி மாண்ட்ரியலில் இருந்து லண்டன் வழியாக டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் (கனிஷ்கா) பயணிகளின் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு அட்லாண்டிக் பெருங்கடல் மேல் பறந்தபோது வெடித்தது. விமானத்தில் இருந்த 329 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உயிரிழந்தனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கடலில் இருந்து 131 உடல்களை மட்டுமே மீட்டெடுக்க முடிந்தது.
இந்த தாக்குதல் 1984ஆம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடைபெற்ற ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’க்கு பழிவாங்கும் நோக்கில் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்டது என கனடா விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "வென்றது தூய்மை பணியாளர்கள் போராட்டம்"..! தனியார் மயத்தை கைவிட்ட தமிழ்நாடு அரசு..! டெண்டர் ரத்து..!!

கனடாவை தளமாகக் கொண்டு செயல்பட்ட காலிஸ்தான் தீவிரவாதிகளே இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர் என கனடா உளவுத்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. “இது கனடாவின் வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்” எனவும் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் கனடா நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த 40 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் கனடா தரப்பில் தெளிவான அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இல்லாதது இந்தியா-கனடா உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி வந்தது. இப்போது கனடா உளவுத்துறையின் இந்த ஒப்புதல் இரு நாட்டு உறவுகளில் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு வழக்கில் பல ஆண்டுகளாக இந்தியா காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக கனடா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்த நிலையில், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகள் கழித்து வந்துள்ள இந்த ஒப்புதல் ஏன் இப்போது என்பது குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் உலக அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசும், பலியானவர்களின் குடும்பத்தினரும் நீண்டகாலமாக எதிர்பார்த்த இந்த அறிவிப்பு, நீதிக்கான போராட்டத்தில் ஒரு முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாமா? கூடாதா? ட்ரம்ப் முடிவு செய்வார் என அமெரிக்க அமைச்சர் பதில்!