சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகள், சன்னதி கதவு நிலைகள், தூண்கள் உள்ளிட்டவற்றில் இருந்த தங்க கவசங்கள் மற்றும் தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள போலீஸின் சிறப்பு விசாரணை குழு (SIT) மேற்கொண்ட விசாரணையில், தங்கத்தை பிரித்து எடுத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனுடன் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர் கோவர்தன் (பெல்லாரி), சென்னை தனியார் நிறுவன CEO பங்கஜ் பண்டாரி ஆகியோரும் இணைந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கில் பணமாக்குதல் (மணி லாண்டரிங்) தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தனி விசாரணை நடத்தி வருகிறது. கொச்சி ED அலுவலகம் இதில் முக்கிய பங்காற்றுகிறது. சமீபத்தில் முன்னாள் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரி முராரி பாபு உள்ளிட்டோரை விசாரித்தது.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு! காங்., - கம்யூ மாறி மாறி புகார்! கேரள அரசியலில் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!
தற்போது, மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஜெயராமுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ED நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் விரிவான விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உன்னிகிருஷ்ணன் போற்றி சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்த நிலையில், இந்த நோட்டீஸ் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், சபரிமலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தங்க கவச தகடுகள் சென்னையில் உள்ள ஜெயராம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பூஜை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
2019இல் நடந்த இந்த பூஜையில் ஜெயராம் கலந்துகொண்டதாகவும், உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஜெயராம் ஏற்கனவே "எனக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று மறுத்துள்ளார். சிறப்பு விசாரணை குழு சமீபத்தில் சென்னை வீட்டில் அவரிடம் விசாரணை நடத்தியது.
இப்போது ED நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், வரும் நாட்களில் ஜெயராம் கொச்சி ED அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் ED தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது.
சபரிமலை தங்க கொள்ளை வழக்கு இப்போது பண மோசடி வழக்காக மாறியுள்ளதால், பிரபல நடிகர் ஜெயராமின் பெயர் இணைக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஐயப்பன் தங்கத்தை வீட்ல வச்சு பூஜை பண்ணா செல்வம் கொட்டும்! விசாரணையில் உளறிக் கொட்டிய ஜெயராம்!