ஸ்டீபன் ஹாக்கிங்கை கவுரவித்த அதே டிராக் பதக்கம்... இந்திய விஞ்ஞானி தீபக் தாருக்கு 2026ல்!
புதுடில்லி: உலகின் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் டிராக் பதக்கம், இந்த ஆண்டு இந்திய இயற்பியலாளர் தீபக் தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் பெற்றுள்ள இந்த விருது, இந்திய அறிவியல் உலகிற்கு கிடைத்துள்ள முக்கியமான சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் செயல்பட்டு வரும் கோட்பாட்டு இயற்பியலுக்கான சர்வதேச மையம் சார்பில் டிராக் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 1985ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, கோட்பாட்டு இயற்பியல் துறையில் சிறப்பான பங்களிப்பை செய்த விஞ்ஞானிகளை கவுரவித்து வருகிறது.
2026ம் ஆண்டுக்கான டிராக் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நான்கு இயற்பியலாளர்களில் தீபக் தாரும் இடம்பெற்றுள்ளார். புள்ளியியல் எந்திரவியல் துறையில் அவர் செய்த முக்கியமான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்.. முதல்வர் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்.. அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்..!!
யார் இந்த தீபக் தார்?
உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கரில் 1951ம் ஆண்டு பிறந்த தீபக் தார், ஹிந்தி வழிக் கல்வியில் தனது ஆரம்பகால படிப்பை மேற்கொண்டவர். சிறு வயது முதலே அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி கான்பூரில் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

அதன்பின் அமெரிக்காவின் புகழ்பெற்ற கால்டெக் நிறுவனத்தில் ரிச்சர்ட் பெய்ன்மேன் உதவித்தொகையைப் பெற்றார். அங்கு உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் ரிச்சர்ட் பெய்ன்மேனுடன் இணைந்து பணியாற்றிய அவர், 1978ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இருந்தபோதிலும், இந்தியாவுக்கு திரும்பிய தீபக் தார், மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்தார். பின்னர் ஐசர் புனேவில் சுமார் எட்டு ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி, ஏராளமான மாணவர்களுக்கு புள்ளியியல் இயற்பியலை கற்பித்தார்.
அறிவியல் துறையில் அவரது நீண்டகால பங்களிப்புக்கு ஏற்கனவே பல்வேறு உயரிய விருதுகள் கிடைத்துள்ளன. புள்ளியியல் இயற்பியல் துறையின் முக்கிய சர்வதேச விருதுகளில் ஒன்றான போல்ட்ஸ்மேன் பதக்கமும், இந்திய அரசின் பத்ம பூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர்களை கவுரவித்த டிராக் பதக்கம் தற்போது தீபக் தாருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது, இந்திய அறிவியல் துறைக்கு கிடைத்துள்ள மற்றொரு முக்கியமான சர்வதேச கவுரவமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 15க்கு டெல்லி ரெடி! பிரதமர் மோடி உரையாற்றும் செங்கோட்டையை சுற்றி தீவிர கண்காணிப்பு! உச்சக்கட்ட பாதுகாப்பு!