திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் 85ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், முரசொலியை கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பாகவும், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பாகவும், முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளையாகவும் பாராட்டினார்.
1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி திருவாரூரில் இளம் வயதிலேயே கலைஞரால் கையால் எழுதப்பட்ட துண்டு அறிக்கையாகத் தொடங்கப்பட்ட முரசொலி, பின்னர் வார இதழாகவும், 1960ஆம் ஆண்டு முதல் நாளிதழாகவும் வளர்ந்து, திராவிட இயக்கத்தின் குரலாக திகழ்கிறது. தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் ஆகியோர் தொடர்ந்து இதைச் செழுமையாக வளர்த்தெடுத்தனர்.

திமுகத் தலைவர் ஸ்டாலினும், இளம் வயதிலிருந்தே முரசொலிக்காக அனைத்து நிலைகளிலும் பணியாற்றியுள்ளார் என்பதை அவர் தனது பதிவில் நினைவுகூர்ந்தார். பல அரசியல் கட்சி இதழ்கள் வெறும் அறிவிப்புப் பலகைகளாகச் செயல்படும் நிலையில், முரசொலி கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் சிறப்பு மலர், பாசறைப் பக்கம் போன்றவற்றின் மூலம் அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழ்கிறது. இது திராவிடக் கொள்கைகளைப் பாதுகாத்து, தமிழ் இனத்தின் உரிமைகளை உயர்த்தும் கருவியாக செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
அலுவலக வருகையின் போது ஸ்டாலின், தனது மூத்த சகோதரனுக்கு 85ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். முரசொலியின் பயணம் நூறாண்டுகளைக் கடந்தும் தொடரும் என்றும், அதன் பணிகளில் தொடர்ந்து வெற்றி பெறட்டும் என்றும் அவர் வாழ்த்தினார். திமுகத் தொண்டர்கள் மத்தியில் இதயத்துடிப்பாக விளங்கும் இந்த நாளிதழ், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றை ஆவணப்படுத்தும் முக்கிய ஆவணமாகவும் திகழ்கிறது.
இதையும் படிங்க: உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!