குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர்.
இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர். இதில் 11ஏ இருக்கையில் பயணம் செய்த ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற பயணியை தவிர மற்ற 241 பெரும் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் விமானம் வெடித்து சிதறியதால் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது.

கல்லூரி வளாகத்தில் இருந்த ஏராளமானவர்கள் இந்த கோர விபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 33 பேர் பலியாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதனால் அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்து இருக்கிறது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, டாடா குழுமம் அறிவித்து இருந்தது.
இதையும் படிங்க: 1206 அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமானது.. விஜய் ரூபானி வாழ்க்கையில் சோக சம்பவம்..!
ஏர் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமானடாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனுக்கு, இந்திய மருத்துவ சங்கம் ஒரு கடிதம் எழுதியது. அதில் இறந்த மற்றும் காயமடைந்த குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் டாடா சன்ஸ் குழுமத்துடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதி செய்கிறோம். விபத்தில் இறந்தவர்களுக்கு ஏற்கனவே 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது பாராட்டுக்குரியது.

அதேசமயம், இந்த கோர விபத்தில் உயிரிழந்த பி.ஜே.மருத்துவக் கல்லுாரியைச் சேர்ந்த டாக்டர்கள் மற்றும் மாணவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உங்கள் நிறுவனம் இழப்பீடு வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும். அவர்களின் மருத்துவச் செலவுகளையும் ஏற்றால் பேருதவியாக இருக்கும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இறந்தவர்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண் இயக்குநருமான கேம்பல் வில்சன் கூறியதாவது: எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடனடி தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இது டாடா நிறுவனம் வழங்குவதாக கூறிய 1 கோடி ரூபாயுடன் சேர்த்து வழங்கப்படும். இந்த விபத்தில் சொந்தங்களை இழந்த குடும்பத்தினருக்கு ஏர் இந்தியா நிறுவனம் எப்போதும் உறுதுணையாக நிற்கும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம். இழப்பீட்டுடன் காயமடைந்த அனைவரின் மருத்துவ செலவுகளையும் ஏர் இந்தியா ஏற்கும். மீட்புப் பணியில் உதவ 100 பராமரிப்பாளர்கள் மற்றும் 40 பொறியாளர்கள் ஆமதாபாத் விரைந்துள்ளனர் எனக் கூறினார்.
இதையும் படிங்க: விமான விபத்தில் தப்பியது ஒருவரல்ல.. இருவர்! உடம்பெல்லாம் நடுக்கத்துடன் விவரிக்கும் இளம்பெண்..!