ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கொடியுடன் செல்லும் சரக்குக் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ஈரான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி திட்டங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக மூடியுள்ளதாக முன்னர் எச்சரித்திருந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எண்ணெய், எரிவாயு சப்ளை பாதிக்கப்பட்டது.
சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், இந்தியக் கொடியுடன் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயண அனுமதி கிடைத்ததாக இந்திய தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின. இதனால் எண்ணெய் தட்டுப்பாடு விரைவில் தீரும் என்ற நம்பிக்கை எழுந்தது.
இதையும் படிங்க: வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்! ஈரானுக்கு வலுக்கும் கண்டனம்! தீர்மானம் நிறைவேற்ற ஐ.நா ஒப்புதல்!
ஆனால், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை மறுத்துள்ளது. “இந்திய சரக்குக் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல எந்த சிறப்பு அனுமதியும் வழங்கப்படவில்லை” என்று ஈரான் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் முந்தைய நம்பிக்கை முற்றிலும் பறிபோயுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த ஒரு கப்பல் மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. லைபீரியா கொடியுடன் வந்த இந்தக் கப்பல் 1.35 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெயை சுமந்து வந்தது.
மார்ச் 8 அன்று ஜலசந்தியை கடக்கும்போது தாக்குதல் அச்சத்தால் AIS (தானியங்கி அடையாள சமிக்ஞை) சாதனத்தை அணைத்து பயணித்தது. இந்தக் கப்பல் தப்பியது தற்செயலானதா அல்லது ஏதோ சிறப்பு ஏற்பாடா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், ஈரானின் மறுப்பு இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி திட்டங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், எண்ணெய் விலை உயர்வும், தட்டுப்பாடும் தொடரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தியா மாற்று வழித்தடங்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க முயன்று வருகிறது. ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் நீடித்தால், எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கும்.
இதையும் படிங்க: ஜெய்சங்கர் தரமான சம்பவம்! இந்தியா - ஈரான் இடையே ஒப்பந்தம்! இனி ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்!!