ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், ஈரான் வளைகுடா நாடுகள் மீது நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போரின் பின்னணியில் நடந்துள்ள முக்கியமான நடவடிக்கையாகும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் யுஏஇ (UAE), சவுதி அரேபியா, ஓமன், கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை குறி வைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
குறிப்பாக துபாய் போன்ற பொருளாதார மையங்களில் வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள், தொழில்துறை பகுதிகள் ஆகியவை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. இதனால் சிட்டி வங்கி உள்ளிட்ட சில அமெரிக்க வங்கிகள் துபாயில் தங்கள் கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளன.
இதையும் படிங்க: ஈரான் செய்யுறது ரொம்ப பெரிய துரோகம்! இப்பிடி பண்ணுவாங்கனு நினைக்கல! கத்தார் பிரதமர் காட்டம்!!
இந்நிலையில், இன்று அதிகாலை 2.45 மணியளவில் துபாய் கிரீக் ஹார்பர் பகுதியில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் கட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அலறியடித்தபடி மக்கள் கட்டடத்திலிருந்து வெளியேறினர்.
அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைத்து குடியிருப்பாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு படையினர் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த தொடர் தாக்குதல்களை கண்டித்து, வளைகுடா நாடுகள் சார்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 13 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து, ரஷ்யா மற்றும் சீனா வாக்களிக்காமல் இருந்தன. எதிர்ப்பு ஏதும் இல்லை.

இந்த தீர்மானம் ஈரானின் தாக்குதல்களை சர்வதேச சட்டத்திற்கு எதிரானவை என்றும், உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் கண்டிக்கிறது. வளைகுடா பகுதியில் எரிசக்தி, வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கு மிக முக்கியமான இடத்தில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது என்று வலியுறுத்தியுள்ளது.
பஹ்ரைனின் ஐநா தூதர் ஜமால் அல்ரோவாய் (ஜமால் ஃபாரெஸ் அல்ரோவைஈ) பேசுகையில், “இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களை சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து எதிர்க்கிறது. இது உலகப் பொருளாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தக பாதைகளுக்கு பெரும் அச்சுறுத்தல்” என்று கூறினார்.
தீர்மானம் ஈரானை உடனடியாக தாக்குதல்களை நிறுத்துமாறு கோருகிறது. ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் போன்ற முக்கிய கடல் பாதைகளை தடை செய்யும் எந்த முயற்சியையும் கண்டிக்கிறது.
இந்த போர் தொடங்கிய பின்னர் வளைகுடா நாடுகளில் பலர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு, வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐநா தீர்மானம் போரை தணிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது, ஆனால் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் பதற்றம் நீடிக்கிறது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இந்தியாவுக்கு பாதிப்பு?! டெல்லியில் மோடி தலைமையில் அவசர ஆலோசனை!