கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் வட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலையில் மூன்று தமிழ் பேசும் நபர்கள் வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபாஸ்டியன் டேவிட் குமார் ஆகியோர். இவர்கள் அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து அங்கே வாழ்ந்து வந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
வனத்துறை தரப்பில் கூறப்பட்ட கதையின்படி, இவர்கள் மான்களை வேட்டையாட வனப்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அதிகாரிகள் அவர்களைத் தடுக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டு தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் இந்த விளக்கத்தை முழுமையாக நிராகரித்தனர். இவர்கள் கால்நடைகளைத் தேடிச் சென்றதாகவும், எந்தவித ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்றும் கூறினர். சம்பவத்திற்குப் பிறகு உள்ளூரில் போராட்டங்கள் வெடித்தன. சாலை மறியல்கள் நடைபெற்றன.

உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்குக் கொடுக்காமல் குடும்பத்தினர் சில நாட்கள் தடுத்து வைத்திருந்தனர்.பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் வெளியான பிறகு நிலைமை மேலும் சிக்கலானது. அறிக்கைகளின்படி மூவரும் மிக அருகாமையில் இருந்து சுடப்பட்டதாகத் தெரிகிறது. விலா எலும்புகள் முறிந்திருந்தன. உடலில் பல இடங்களில் துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் இருந்தன. ஒருவரின் மார்புப் பகுதியில் எரிந்த தடயங்கள் இருந்தன. இது தற்காப்புச் சூடு என்ற வனத்துறையின் வாதத்துக்கு முரணாக அமைந்தது. சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நான்காவது நபர் ஒருவர் காயங்களுடன் தப்பினார். அவரது வாக்குமூலமும் வனத்துறை கதையை மறுக்கும் வகையில் இருந்ததாகத் தெரிகிறது.இந்தச் சம்பவம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும் விவாதத்தை உருவாக்கியது. பல்வேறு கட்சிகள் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டு வந்தன.
இதையும் படிங்க: கர்நாடகாவில் முடிந்த SIR பணிகள்..! ஒரு கோடி பேர் நீக்கம்..!! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!
நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. கர்நாடக அரசு முதலில் மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்துவதாக அறிவித்தது. பின்னர் நிலைமை மாறியது. பிரேதப் பரிசோதனை முடிவுகளும் பொதுமக்கள் எதிர்ப்பும் காரணமாக கர்நாடக போலீஸ் துறை இந்த வழக்கை சிஐடிக்கு மாற்றியுள்ளது. ஹானூர், ராமபுரா மற்றும் கொள்ளேகாலா போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தொடர்புடைய வழக்குகள் அனைத்தும் சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளன. வன அதிகாரிகள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.சிஐடி விசாரணை தொடங்கியுள்ள இந்த நிலையில், உண்மை வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவை மிரட்டும் பன்றி காய்ச்சல்..! பீதியில் மக்கள்..! சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்..!!