2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் உலகையே உலுக்கியது. கடல் வழியாக ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த கொடூர சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் அதேபோன்ற கடல் வழி தாக்குதலை திட்டமிட்டுள்ளதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படைகள் ஒரு வீடியோவை கைப்பற்றி இந்த சதித் திட்டத்தை மோப்பம் பிடித்துள்ளன.
கைப்பற்றப்பட்ட வீடியோவில் லஷ்கர்-இ-தொய்பாவில் "கடற்படை" என்ற தனி பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஹாரிஸ் தார் (ஹரிஸ் தார்) தலைமையில் 5,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு கடல் வழியே ஊடுருவும் பயிற்சி அளிக்கப்படுவதாக வீடியோ காட்டுகிறது.
இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ், அல் கொய்தாவுக்கு ஆப்பு! ஐநாவில் இந்தியா செக்!! பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், முரிட்கே, லாகூர், பஹவல்பூர், கசூர், அலிபூர், கராச்சி மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மங்களா அணை, முசாபராபாத் போன்ற இடங்களில் இந்த பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பயிற்சியை ரிஸ்வான் ஹனீப் மற்றும் அமீர் ஜியா போன்ற முக்கிய தலைவர்கள் ஒருங்கிணைக்கின்றனர். ஏற்கனவே டில்லி செங்கோட்டை, மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து டில்லி, உத்தரப்பிரதேசம், காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தானுடனான எல்லையில் இந்திய ராணுவம் கடும் பாதுகாப்பு போட்டுள்ளதால், தரைவழியாக ஊடுருவ முடியாத நிலை உள்ளது. எனவே கடல் வழியை பயங்கரவாதிகள் தேர்வு செய்துள்ளனர் என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரபிக்கடல் முழுவதும் இந்திய கடற்படை உஷார் நிலையில் உள்ளது. தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த எச்சரிக்கை நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 26/11 தாக்குதலின் நினைவுகளை மீண்டும் தூண்டியுள்ள இந்த தகவல், பாதுகாப்பு படைகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வட போச்சே..!! தவெகவுக்கு கொடுத்த ஆதரவு வாபஸ்... அந்த பல்ட்டி அடித்த கட்சி..!!