உலகளாவியத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா (Meta) மற்றும் அதன் அங்கமான வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனங்களுக்கு இந்திய உச்சநீதிமன்றம் வரலாறு காணாத கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பையும், இந்நாட்டுச் சட்டங்களையும் பின்பற்ற முடியாவிட்டால், இந்தியாவை விட்டு தாராளமாக வெளியேறலாம் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆவேசமாகத் தெரிவித்துள்ளது.

இந்தியப் போட்டி ஆணையம், வாட்ஸ்அப் நிறுவனத்தின் 2021-ஆம் ஆண்டு தனியுரிமைக் கொள்கை குறித்து ஆய்வு செய்தது. அதில் பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதி இன்றி ஃபேஸ்புக் போன்ற தனது பிற தளங்களுடன் பகிர்ந்து, விளம்பரங்களுக்காகவும் வணிக ரீதியாகவும் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தவறான மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறைக்காக மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோதுதான் நீதிபதிகளின் கடும் கோபத்திற்கு அந்த நிறுவனம் ஆளானது.
இதையும் படிங்க: முதலமைச்சராக அல்ல; ஒரு சாதாரண குடிமகனாக! உச்சநீதிமன்றத்தில் வாதாடும் மம்தா பானர்ஜி!
தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, மெட்டா நிறுவனத்தின் வழக்கறிஞரிடம் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டும் என்றால், இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை விட இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே மேலானது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகளைப் பிற தளங்களுடன் பகிர்வது என்பது தனிமனித உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும், இதனை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்திய சட்டங்களைப் பின்பற்ற உங்களுக்கு விருப்பமில்லை என்றால், நீங்கள் இந்தியச் சந்தையிலிருந்து வெளியேற தடை ஏதுமில்லை என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
மெட்டா நிறுவனம் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்திச் சிறு நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பாதிப்பதாகவும், பயனர்களின் தரவுகளைத் தனது லாபத்திற்காகச் சுரண்டுவதாகவும் இந்தியப் போட்டி ஆணையம் நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அபராதத்திற்குத் தடை விதிக்க மறுத்ததோடு, விசாரணையை அடுத்தக் கட்டத்திற்குத் தள்ளிவைத்தது.
இதையும் படிங்க: வசதியானவர்களுக்கு எதுக்கு கோட்டா? 6 வாரம் தான் டைம்.. மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் செக்!