ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நவீன் பஞ்சலால் (37). புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் வசித்து வந்தவர் இவர் சென்னையில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், பால் நிறுவனத்தில் நடந்த ஆடிட்டிங்கில் சுமார் 44.5 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக பால் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள், கடந்த ஜூன் 27ம் தேதி கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்த தொடங்கியதும் நவீன் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் நவீன் பஞ்சலாலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்துவதற்காக, அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது விசாரணைக்கு நாளை வருகிறேன் எனவும், பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றும் கூறி தொடர்பை துண்டித்து விட்டார்.
இதையும் படிங்க: சோறு போட்ட நாங்க இப்ப பிச்சை எடுக்கிறோம்.. விபரீத முடிவுகளை கையிலெடுக்கும் விவசாயிகள்..!
இந்த சூழலில் கடந்த 9ம் தேதி புழல் காவல் நிலையத்துக்குட்பட்ட பிரிட்டானிய நகர் 1-வது மெயின் ரோட்டில் உள்ள குடிசையில் நவீன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது சகோதரி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த புழல் போலீஸார் நவீனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நவீன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரித்தபோது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் வேலை செய்த நிறுவனத்திற்கு இ-மெயில் அனுப்பிய விவரம் கிடைத்தது. அதில் 5 அதிகாரிகளின் மிரட்டலால் இந்த விபரீத முடிவை எடுப்பதாக நவீன் குறிப்பிட்டிருப்பதாக தகவல் உள்ளது. அதன் அடிப்படையிலும், பணம் கையாடலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் புழல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பால் நிறுவன மேலாளர் நவீன் உயிரிழந்த சம்பவத்தை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், நவீன் மீது பால் நிறுவனம் புகாரளித்தது உண்மைதான். ஆனால் அந்த புகார் தொடர்பாக பால் நிறுவனத்திடம் ஆதாரங்களைக் கேட்டிருந்தோம். அதை அவர்கள் எங்களிடம் கொடுக்காத சூழலில் எங்களால் எப்படி நவீனிடம் விசாரிக்க முடியும். நவீன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் 5 கோடி ரூபாய் பணத்தை திரும்ப அனுப்பிய தகவலும் எங்களுக்குத் தெரியாது. நவீனின் மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த விசாரணையில் நவீனை மிரட்டியவர்கள் குறித்த விவரங்களும் தெரியவரும். அதன்அடிப்படையில் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் நவீன் எப்படி இறந்தார் என்பது தெளிவாக தெரிந்துவிடும். அதன்பிறகே அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உங்க சண்டைல அந்த பிஞ்சு குழந்தைங்க என்னம்மா பண்ணுச்சு.. ஆத்திரத்தால் நேர்ந்த சோகம்.. உருக்குலைந்த குடும்பம்..!