கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கேரளாவில் நடைபெற்ற ஒரு முக்கிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
சைனிக் சம்மான் என்ற பெயரில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், நாட்டின் எரிசக்தி தேவைகள் குறித்து முக்கிய உறுதியளிப்புகளை வழங்கினார். “நாட்டில் எரிபொருள் அல்லது எரிவாயு பற்றாக்குறை எதுவும் இல்லை. மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்படும் எந்தவித மோதல்களாலும் ஏற்படக்கூடிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இந்தியா முழுமையாக தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
இந்திய கடற்படையின் கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் நாட்டின் எண்ணெய் கப்பல்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் நாட்டின் எரிசக்தி இறக்குமதி பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை... செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

மேலும், வளைகுடா பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி தனது திறமையான ராஜதந்திரத்தை பயன்படுத்தி வருவதாக ராஜ்நாத் சிங் பாராட்டினார். “மேற்கு ஆசியாவில் நிலவும் சூழலை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது” என்று அவர் வலியுறுத்தினார்.
கேரளாவின் அரசியல் சூழல் குறித்தும் அமைச்சர் தனது கருத்தைப் பதிவு செய்தார். மாநிலத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை கொண்டு வரக்கூடிய ஒரே அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மட்டுமே என்று அவர் கூறினார்.
“பாஜக என்பது பிரதமர் மோடியின் உத்தரவாதங்களை கொண்ட கட்சி. அவரது தலைமை 24 காரட் தங்கம் போன்றது. அது சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்ட தலைமை” என்று புகழாரம் சூட்டினார். எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து மாநிலத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: சாதி ஓட்டுகளை வளைக்க திட்டம்! ஸ்டாலின் ஸ்கெட்ச்! 14 முதலியார்! 15 தெலுங்கு வேட்பாளர்களை களமிறக்கும் திமுக!